/indian-express-tamil/media/media_files/K9zYpfmCaUMmJ6G62Wk3.jpg)
NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி. (பி.டி.ஐ)
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) பாடத்திட்டத்தில் புதிதாக திருத்தப்பட்ட மாற்றங்கள் குறித்த செய்திகளுக்கு பதிலளித்த அதன் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, "பாடத்திட்டத்தை காவிமயமாக்கும் முயற்சிகள் எதுவும் இல்லை" என்றும் அனைத்து மாற்றங்களும் "ஆதாரங்கள் மற்றும் உண்மைகளை" அடிப்படையாகக் கொண்டவை என்றும் கூறினார்.
செய்தி நிறுவனமான பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில், என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, “கலவரங்கள் பற்றி மாணவர்களுக்கு ஏன் கற்பிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். ”பாடப்புத்தகத்தின் நோக்கம் வன்முறை, மனச்சோர்வடைந்த குடிமக்களை உருவாக்குவது அல்ல. பள்ளிகளில் வரலாறு கற்பிக்கப்படுவது உண்மைகளை வெளிக்கொணரவே தவிர, அதை ஒரு "போர்க்களமாக" மாற்றுவதற்கு அல்ல” என்று தினேஷ் பிரசாத் சக்லானி கூறினார்.
"வெறுப்பு, வன்முறை ஆகியவை பள்ளியில் கற்பிப்பதற்கான பாடங்கள் அல்ல," அவை "பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்தக்கூடாது," என்று தினேஷ் பிரசாத் சக்லானி பி.டி.ஐ இடம் கூறினார்.
கடந்த வாரம் வெளிவந்த திருத்தப்பட்ட என்.சி.இ.ஆர்.டி 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் பாபர் மசூதியை "மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு" என்று குறிப்பிடவில்லை என்றும், அயோத்தி பாடப்பகுதியை நான்கிலிருந்து இரண்டு பக்கங்கள் வரை கத்தரித்து, முந்தைய பதிப்பில் கூறப்பட்ட விவரங்களை நீக்கியுள்ளது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. நீக்கப்பட்டவை: குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை பா.ஜ.க ரத யாத்திரை; கரசேவகர்கள் பங்கு; டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த வகுப்புவாத வன்முறை; பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி; மற்றும் "அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கு வருத்தம்" என்ற பா.ஜ.க.,வின் வெளிப்பாடு.
பாடப்புத்தகங்களின் திருத்தம் "பொதுவான நடைமுறை" மற்றும் "கல்வியின் நலன்" என்று தினேஷ் பிரசாத் சக்லானி கூறினார். புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளைக் குறிப்பிட்டு, "எதுவும் பொருத்தமற்றதாக இருந்தால், அதை மாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார். அதே நேரத்தில் பாடப்புத்தகங்களைத் திருத்தும் செயல்பாட்டில் அவர் "ஆணையிடவோ அல்லது தலையிடவோ" இல்லை என்பதையும், அது பாட நிபுணர்களால் செய்யப்பட்டது என்பதையும் தினேஷ் பிரசாத் சக்லானி தெளிவுபடுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.