லோக்சபா தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவில் பொதுத் தேர்தல் குறித்த கருத்துக்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசியல்வாதி சவுத்ரி ஃபவாத் ஹுசைனுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Will not tolerate interference’: Kejriwal replies to Pakistan’s Fawad Hussain over remark on Lok Sabha polls
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தது குறித்து வெளியிட்ட பதிவில் கமெண்ட் செய்த பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன், “அமைதியும் நல்லிணக்கமும் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளைத் தோற்கடிக்கட்டும்” என்று கூறினார். இதற்கு, இந்தியில் பதிலளித்த கெஜ்ரிவால், “சவுத்ரி சாஹிப், நான் மற்றும் எனது நாட்டு மக்கள் எங்கள் பிரச்சினைகளை கையாளும் திறன் கொண்டவர்கள். உங்கள் ட்வீட் தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவில் தேர்தல் நடைபெறுவது எங்களது உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது,” என்றும் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
தனது வாக்குரிமையைப் பயன்படுத்திய பின்னர் தனது குடும்பத்தினரின் படத்தை வெளியிட்டு, டெல்லி முதல்வர் எழுதினார்: “நான் இன்று எனது தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாக்களித்தேன். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் போக முடியவில்லை. நான் சர்வாதிகாரம், வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களித்தேன். நீங்களும் சென்று வாக்களிக்க வேண்டும்” என்று பதிவிட்டார்.
இதற்கு பா.ஜ.க.,வும் பதிலளித்து, ஆம் ஆத்மி கட்சி தலைவரை சாடியுள்ளது. “டெல்லிவாசிகளுக்கு ஒரு பெரிய செய்தி. கெஜ்ரிவாலுக்கு வாக்களிக்க பாகிஸ்தானில் இருந்து வேண்டுகோள்!” என்று பா.ஜ.க குறிப்பிட்டுள்ளது. டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தேசத்தின் எதிரியான பாகிஸ்தானும் கெஜ்ரிவாலின் ஊழல் அரசியலை ஆதரிக்க முன்வந்துள்ளது என்றால், தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் நிதி பெறும் உறவைப் பற்றி முதல் நாளிலிருந்து நாங்கள் கூறி வருவதை இது நிரூபிக்கிறது.
வீரேந்திர சச்தேவா மேலும் கூறுகையில், “அவரது அரசியலுக்கு நிதியளிப்பதில் இந்த அமைப்புகளுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை இது நிரூபிக்கிறது. பாகிஸ்தான் அவருக்கு ஆதரவாக பேசினால்... நான் கேட்க விரும்புகிறேன்: நாட்டில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன, ஆனால் அப்படி எந்த அறிக்கையும் இல்லை. இன்று, டெல்லியில் வாக்குப்பதிவு நடக்கும் போது, கெஜ்ரிவாலுக்கான தேர்தல் நடக்கும் போது, பாகிஸ்தான் ஏன் தலையிடுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்டமாக, எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். இந்தக் கட்டத்தின் முடிவில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிடும், ஏழாவது கட்டத்திற்கு இன்னும் 57 இடங்கள் மட்டுமே உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“