ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1,000 வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ள திட்டத்தை அறிவித்தார். ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகை ரூ 2,100 ஆக உயர்த்துவதாக உறுதியளித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Will increase Mahila Samman Rashi Scheme monthly allowance from Rs 1,000 to Rs 2,100 if AAP returns to power: Arvind Kejriwal
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மகிளா சம்மான் ராசி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்தார்.
ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு மார்ச் மாதம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ 1,000 உதவித்தொகை என அறிவித்த மகிளா சம்மான் ராசித் திட்டத்துக்கு, முதல்வர் அதிஷி தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தனது தேர்தல் வாக்குறுதியில் பேசிய கெஜ்ரிவால், “இன்று நான் இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடப் போகிறேன். இரண்டு திட்டங்களும் எனது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கானது. நண்பர்களே, டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் 1,000 ரூபாய் அனுப்புவதாக உறுதியளித்தேன். அதிஷி தலைமையிலான அமைச்சரவை இன்று (வியாழக்கிழமை) மகிளா சம்மான் ராசி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
“இன்று, நான் ரூ 1,000 திட்டத்தை செயல்படுத்துகிறேன், ஆனால், தேர்தலுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள எனது சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் ரூ.2,100 வழங்குவேன். இந்த பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் பெற விரும்பினால், கெஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள், மேலும், 60 இடங்களுக்கு மேல் வெற்றிபெற எங்களுக்கு உதவுங்கள்” என்று கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டதாகவும், ஏப்ரலுக்குள் அமல்படுத்தப்படும் என நம்புவதாகவும் கெஜ்ரிவால் கூறினார். “ஆனால் அவர்கள் என்னை பொய் வழக்கில் சிறையில் அடைத்தனர். ஆனால், நான் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, எனது வாக்குறுதியை நிறைவேற்ற அதிஷியுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டேன்” என்றார்.
மேலும், “தேர்தல் தேதிகள் ஓரிரு வாரங்களில் விரைவில் அறிவிக்கப்படும், எனவே, இப்போதைக்கு பெண்களுக்குத் உதவித் தொகை கிடைக்காமல் போகலாம், ஆனால், தேர்தல் முடிந்ததும், நீங்கள் ஒவ்வொரு மாதமும் தொகையைப் பெறுவீர்கள்… எனது இரண்டாவது பெரிய அறிவிப்பு என்னவென்றால், நான் தொகையை அதிகரிப்பேன் மற்றும் அந்த தொகையை ரூ.2,100 ஆக உயர்த்துவேன்” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கான பதிவு செயல்முறை வியாழக்கிழமை தொடங்கும் என்றும் அவர் கூறினார். டெல்லி அரசு எந்தப் பற்றாக்குறையையும் சந்திக்காது, மாறாக பெண்களை மையமாகக் கொண்ட திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் அதன் வருவாய் செழிக்கும் என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.
பாஜகவைத் தாக்கிய அவர், “கெஜ்ரிவால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால், கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தால், அவர் அதை நிறைவேற்றுகிறார்… பா.ஜ.க கூறுகிறது, எங்கே இருக்கிறது? அரசாங்கத்திடம் பணமில்லையா?’ என்று 2014-ல் நான் மின்சார மானியத் திட்டத்தை அறிவித்தபோதும் இதையே சொன்னார்கள். ஆனால், நான் பா.ஜ.க-விடம் சொல்ல விரும்புகிறேன், என்னால் கணக்குகளை நன்றாக நிர்வகிக்க முடியும். பணத்தை எப்படிக் கொண்டுவருவது என்று எனக்குத் தெரியும்.” என்று கெஜ்ரிவால் கூறினார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு பெண்களிடம் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார். “அவர் (கெஜ்ரிவால்) பணத்தை எங்கிருந்து கொண்டு வருவார்?' என்று உங்களிடம் யாராவது கேட்டால், கெஜ்ரிவால் ஒரு மந்திரவாதி, அவர் பணம் தருவார் என்று சொல்லுங்கள்; 60 இடங்கள் அல்லது 50 இடங்கள் வெல்வார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். எனது சகோதரிகள் மற்றும் தாய்மார்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்... உங்கள் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. எங்களுக்கு வாக்களித்து 60 இடங்களுக்கு மேல் தாருங்கள்” என்றார்.
மேலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“