கர்நாடக முதல்வராக கடந்த மே மாதம் 17ம் தேதி பதவியேற்ற பாஜகவின் எடியூரப்பா, 56 மணி நேரத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எடியூரப்பாவின் முதல்வர் பதவியேற்பை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் மற்றும் மஜத தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று(19.5.18) மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.
ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க உரிமை கோராமல், தனது பதவியை எடியூரப்பா இன்று ராஜினாமா செய்தார். இதுகுறித்த மற்ற கட்சித் தலைவர்களின் கருத்துகளை இங்கே பார்க்கலாம்,
உச்சநீதிமன்றத்தால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது, காங்கிரஸ் மற்றும் குமாரசாமிக்கு எனது வாழ்த்துகள் - ஸ்டாலின்
ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஜனநாயகம் வெற்றி பெற்றதற்கு கர்நாடக மக்களுக்கு வாழ்த்து - மம்தா பானர்ஜி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், 'கர்நாடக மக்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கீதம் பாடப்படும்போதே பாஜக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேறினர். தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை.மக்களின் தீர்ப்பை எந்த மாநிலத்திலும் பாஜக மதிப்பதில்லை. ஒற்றுமையோடு எதிர்க்கட்சியினர் பாஜகவை வீழ்த்தியது பெருமையாக உள்ளது; தொடர்ந்து பாஜகவை வீழ்த்துவோம். எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி' என்றார்.
ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் - ப.சிதம்பரம் ட்வீட்