கர்நாடக மாநில முதல்வராக, எடியூரப்பா, இன்று (ஜூலை 26ம் தேதி)மாலை பதவியேற்றார். எடியூரப்பா, நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றது குறிப்பிடத்தக்கது. பதவிேயற்பு விழாவிற்காக கவர்னர் மாளிகை செல்வதற்குமுன், கட்சி தலைமையகத்தில் உள்ள ஜெகந்நாத் பவனில், கட்சி தொண்டர்களை, எடியூரப்பா சந்தித்தார்.
கவிழ்ந்தது குமாரசாமி அரசு : கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி ஆட்சி, நடைபெற்று வந்தது. இம்மாத துவக்கத்தில், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததையடுத்து, கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், 23ம் தேதி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் முயற்சியில், முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா ஈடுபட்டார். இது தொடர்பாக, கட்சி தலைமையின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்த பின், கவர்னரை சந்திக்கப் போவதாகவும், அறிவித்திருந்தார். இதனிடையே, சுயேட்சை மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டடுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா கூறியதாவது: கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து கவர்னர் என்னிடம் கடிதம் கொடுத்தார். இன்று(ஜூலை 26) மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளேன் எனக்கூறினார்.
ஜூலை 31க்குள் பெரும்பான்மை : இன்று எடியூரப்பா, முதல்வராக பதவியேற்றாலும், ஜூலை 31 ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
சித்தராமைய்யா கேள்வி : பெரும்பான்மை இல்லாத கட்சியை, கவர்னர் எவ்வாறு ஆட்சியமைக்க அழைக்கமுடியும். கர்நாடகாவில், பாரதிய ஜனநாயக கட்சி, கவர்னரின் ஆதரவுடன் ஜனநாயக படுகொலை நடத்தி வருகிறது. 105 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே பா.ஜ.வுக்கு உள்ளது.
பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க அழைத்திருப்பது அரசியல் சட்ட அமைப்பையே இழிவுபடுத்தும் செயல் என முன்னாள் முதல்வர் சித்தாராமைய்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.