ஹைதரபாத்தில் காதல் தோல்வி விரக்தியால் வாலிபர் ஒருவர் பொது மக்கள் மத்தியில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாகுடா நகரில் அலுமினிய கடை ஒன்றில் கணினி பிரிவில் பணிபுரிந்தவர் சந்தியா ராணி. அவரை, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சாய்கார்த்திக்(25) என்பவன் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(டிச.,21) மாலை சந்தியா பணிமுடித்து வீடு திரும்பிய போது சாய்கார்த்திக், அவரை தடுத்து நிறுத்தி தன்னை திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினான். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சந்தியாவை கீழே தள்ளிவிட்டு, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றான்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கார்த்திக் அந்த கடையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஒருவாரத்துக்கு முன்பு கார்த்தி சந்தியாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணியை விடும்படி கூறியிருக்கிறார். ஆனால் சந்தியா அதனை மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சந்தியாவை கார்த்திக்கை கொல்ல திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கார்த்திக் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம், சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் இந்துஜா எனும் மென்பொருள் இன்ஜினியரை, ஆகாஷ் என்பவன் அப்பெண்ணின் வீட்டுக்கே சென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றார். இந்தநிலையில், தெலங்கானா மாநிலத்திலும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.