இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருதரப்பினரும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Houthi missile attack on Israeli airport forces Air India Delhi-Tel Aviv flight to divert to Abu Dhabi
இந்நிலையில், இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென்குரின் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த சாலையில் விழுந்துள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவை சில நிமிடங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அதேவேளை, ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7 மடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாகவும், பதிலடி கொடுப்பது குறித்தும் பிரதமர் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் சபையை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருந்த போதும், ஹவுதி ஏவுகணையை தாக்கி அழிப்பதில் ராணுவம் தோல்வியடைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும், டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (மே 6) வரை இஸ்ரேலுக்கு புறப்படும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இஸ்ரேலுக்கு விமானங்களை இயக்கும் ஒரே இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி டெல்லி-டெல் அவிவ் தினசரி சேவையை மீண்டும் தொடங்கியது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு முந்தைய மாதங்களில் பிராந்திய மோதல் காரணமாக விமானம் பல்வேறு காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.