/indian-express-tamil/media/media_files/2025/05/01/c8qF14zqQYMellYiDp2V.jpg)
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி அளிக்க, பிரதமர் மோடி, முப்படைகளுக்கு “முழு செயல்பாட்டு சுதந்திரம்” வழங்கி உத்தரவிட்டுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
சிம்லா ஒப்பந்தம் ரத்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்பரப்பு மூடல் உள்ளிட்ட நடவைடிகைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் இரு நாடுகளும் ராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: US reaches out to India, Pakistan: ‘Do not escalate situation’
இஸ்லாமாபாத் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து 25 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தாயகம் திரும்பிய நாளில் அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் தூதரக எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைந்தது.
டாமி புரூஸ் பேசியதாவது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அங்கு நடக்கும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் வெளியுறவுத்துறை மட்டுமல்லாது, பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம். தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார். "காஷ்மீர் நிலைமை தொடர்பாக" இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் அணுகி வருவதாகவும், "நிலைமையை அதிகரிக்க வேண்டாம்" என்றும் அவர் கூறினார்.
"தினமும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்களிடம் நேரடியாக செயலாளர் பேசுகிறார்..அவர் பேசும் நபர்களில் அவர் ஏற்படுத்தும் சாதாரண தாக்கம், மற்றும் நிச்சயமாக அதிபர் டிரம்ப்பின் தலைமையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேசிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்," என்று ப்ரூஸ் கூறினார்.
"அமெரிக்காவுக்காக இந்த மோசமான வேலையை பாகிஸ்தான் செய்து வருகிறது" என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியது, தனது நாட்டின் பயங்கரவாத தொடர்புகளை ஆசிஃப் ஒப்புக்கொண்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த புரூஸ், "இங்கு விவாதிக்க நான் உண்மையில் தயாராக உள்ள ஒரே விஷயம், வெளியுறவுச் செயலாளர் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் பேசப் போகிறார் என்பதுதான்" என்றார்.
"நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நாங்களும் முழுமையாக கண்காணித்து வருகிறோம். மேலும், பல நிலைகளில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன், வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் மட்டும் அல்லாமல், பல்வேறு நிலைகளிலும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாங்கள், நிச்சயமாக, அனைத்து தரப்பினரும் பொறுப்பான தீர்விற்காக ஒன்றாக பணியாற்ற வேண்டும் என ஊக்குவித்து வருகிறோம். இந்த விசயத்தை உலகம் கண்காணித்து வருகிறது. ஆனால் அது தொடர்பாக எனக்கு கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை."
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறைய வேண்டும் என அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், ஐக்கிய ராச்சியம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு தொலைபேசியில் அழைத்து உள்ளன. ஐக்கிய ராச்சிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி மற்றும் சவூதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத் ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், ஜெய்ஷங்கர் மற்றும் இஷாக் தாருடன் பேசினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். 2 நாடுகளுக்கிடையிலான மோதல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதையும், அதனை தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
2019-ல், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவு செயலாளராக இருந்த மைக் பொம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜுடன் பேசினார். அப்போது அவர் பதற்றம் குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு, உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜான் கெர்ரி, சுஷ்மா ஸ்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதற்றத்தைத் தணிக்க அழைப்பு விடுத்தார். 2 முறையும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.