/tamil-ie/media/media_files/uploads/2017/11/z783.jpg)
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடைபெறும் 50-வது ‘ஆசியான்’ மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து முக்கியமான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் இடைவேளையில் அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும் சர்வதேச நிலவரம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். மேலும் ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சீன பிரதமர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட்டையும் மோடி சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதில் பணமோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்களும் அடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், ஜுன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி டிரம்பை சந்தித்தார். தற்போது 2-வது முறையாக டிரம்பை சந்திக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் டிரம்ப்-மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று மதியம் ஒரு மணியளவில் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.