அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் குழுவில் உறுப்பினர்களாக ஆவதற்கு அழைக்கப்பட்ட புதிய நாடுகள் ஆகும்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, சீன அதிபர் ஷி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது ஒன்றாக நின்று கேமிராவுக்கு போஸ் கொடுத்தனர்.
அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக ஆக்குவதற்கு இந்த வாரம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உச்சிமாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் குழு வியாழக்கிழமை முடிவு செய்ததாக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்தார்.
உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் விரிவாக்கத்தை இந்தியா எப்போதும் முழுமையாக ஆதரிப்பதாகவும், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குழுவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும் கூறினார்.
“பிரிக்ஸை விரிவுபடுத்துவதற்கான முக்கியமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இது பல துருவ உலகில் பல நாடுகளின் நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் விரிவாக்கத்திற்கான வழிகாட்டும் கொள்கைகள், தரநிலைகள், அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து எங்கள் குழுக்கள் ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “குழுவில் உள்ளவர்கள் புதிய உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிரிக்ஸ் அமைப்பிற்கு புதிய ஆற்றலை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த அனைத்து நாடுகளுடனும் இந்தியா மிகவும் ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது.” என்று கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த விவாதம், ஜோகன்னஸ்பர்க்கில் வியாழக்கிழமை முடிவடைந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் நிகழ்ச்சி நிரலில் முதலிடம் வகிக்கிறது.
அனைத்து BRICS உறுப்பினர்களும் இந்த குழுவை வளர்ப்பதற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தாலும், தலைவர்களிடையே எவ்வளவு விரிவாக, எவ்வளவு விரைவாக செயல்படுவது என்பது குறித்து வேறுபாடுகள் இருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”