கனடா நாட்டின் இந்திய தூதர்கள், ஒட்டவாவின் உயர் ஆணையர் உள்ளிட்ட பதவி வகித்தவர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த 14-ஆம் தேதி இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பின்னர் இரு நாட்டின் தூதரக உறவில் மேலும் விரிசல் விழுந்தது. இந்நிலையில், கனடாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மீதமுள்ள இந்திய தூதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘On notice, won’t tolerate…’: Canada Foreign Affairs Minister’s word of caution for remaining Indian diplomats
மாண்ட்ரேல் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது, மீதமுள்ள 15 இந்திய தூதரக அதிகாரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கனடா நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக வியன்னா உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டால், தாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், இரு நாட்டுக்கும் இடையே தூதரக உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் காலிஸ்தான் அமைப்புடன் தொடர்புடையவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனை பொதுமக்கள் முன்னிலையில் பிரகடனப்படுத்தும் அளவிற்கு தீவிரம் வாய்ந்தது என அவர் தனது உரையில் தெரிவித்தார். மேலும், இத்தகைய குறுக்கீடுகள் கனடாவில் இருந்தது இல்லை எனக் கூறிய அவர், மற்ற நாடுகளுடனான ரஷ்யாவின் செயல்பாடுகளை ஒப்பிட்டுள்ளார்.
கனடா நாட்டினர் அச்சுறுத்தலுக்கு உள்ளானது உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இந்திய தூதர்களின் தொடர்பு இருந்ததாக கனடாவின் புலனாய்வு அமைப்பு கூறியதை, அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
இந்தியா மற்றும் கனடா உறவு இடையேயான விரிசலின் தொடக்கப் புள்ளியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைந்தது. நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் ட்ரூடோ குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, இவை அனைத்தும் உள்நோக்குடன் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“