/indian-express-tamil/media/media_files/2025/09/09/internet-access-2025-09-09-11-08-09.jpg)
உலக இணைய சேவைக்கு ஆபத்து: செங்கடலில் துண்டிக்கப்பட்ட இணையக் கேபிள்கள்!
செங்கடலில் ஒரு கப்பல், இன்டர்நெட் கேபிள்களைச் சேதப்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நிலையில், இணைய கேபிள்களின் பலவீனத்தை இது மீண்டும் காட்டுகிறது.
இண்டர்நேஷனல் கேபிள் புரோட்டக்ஷன் கமிட்டி (International Cable Protection Committee), பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக 15 நீருக்கடியில் செல்லும் கேபிள்கள் செல்கின்றன என்று தெரிவித்துள்ளது. இந்த ஜலசந்தி கிழக்கு ஆப்பிரிக்காவையும் அரேபிய தீபகற்பத்தையும் பிரிக்கிறது. கடந்த வார இறுதியில், பல நாடுகளின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட கேபிள்களை 'சவுத் ஈஸ்ட் ஆசியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா 4', 'இந்தியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா' மற்றும் 'FALCON GCX' என அடையாளம் கண்டுள்ளனர். இன்று, அப்பட்டியலில் 'ஐரோப்பா இந்தியா கேட்வே' கேபிளும் இணைக்கப்பட்டுள்ளது என்று 'கென்டிக்' நிறுவனத்தின் இணையப் பகுப்பாய்வு இயக்குனர் டக் மேடோரி தெரிவித்தார்.
முதற்கட்ட அறிக்கைகள், சவுதி அரேபியாவின் ஜெட்டா கடலோரத்தில் கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறின. ஆனால், சவுதி அரேபிய அதிகாரிகள் அல்லது கேபிள் நிறுவனங்கள் இதை உறுதிப்படுத்தவில்லை. இதனால் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கமிட்டியின் செயல்பாட்டு மேலாளர் ஜான் வ்ரோட்டெஸ்லி, "துண்டிக்கப்பட்டதற்கான காரணம், அப்பகுதியில் நடந்த வணிக கப்பல் நடவடிக்கைகளாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 30% சேதங்கள், கப்பல்களின் நங்கூரம் இழுக்கப்படுவதால் ஏற்படுகின்றன" என்றார்.
டக் மேடோரி, ஒரு வணிக கப்பல் அதன் நங்கூரத்தைப் போட்டு இழுத்துச் சென்றபோது, நான்கு கேபிள்களும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். செங்கடலில் உள்ள நீருக்கடியில் செல்லும் கேபிள்கள் ஆழம் குறைவாக இருப்பதால், நங்கூரம் இழுக்கப்படுவதால் அவை சேதமடைய வாய்ப்பு அதிகம்.
கடலுக்கடியில் உள்ள கேபிள்கள், இணையச் சேவையின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன. ஒரு கேபிள் சேதமடைந்தால், இணையச் சேவை வழங்குநர்கள் மற்றொரு பாதையில் இணைய போக்குவரத்தை மாற்றுவார்கள். இதனால் சேவை தடைபடுவதில்லை, ஆனால் வேகம் குறையும். இந்தப் போக்குவரத்து மாற்றம், இணையப் பயனர்களுக்கு தாமதத்தை (latency) ஏற்படுத்தும். இந்த கேபிள் துண்டிப்பால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குறைந்தது 10 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேடோரி தெரிவித்தார். இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் அடங்கும்.
காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால், கேபிள் பாதுகாப்பு ஒரு கவலையாக இருந்து வருகிறது. 2024-ன் தொடக்கத்தில், ஏமனின் நாடுகடத்தப்பட்ட அரசு, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியது. பிறகு, சில கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட ஒரு கப்பல், அதன் நங்கூரத்தை இழுத்துச் சென்றதால் கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், கிளர்ச்சியாளர்கள் இதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று மறுத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.