கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சீனாவிலிருந்து வெளியேற்ற இந்தியா சிறப்பு ஏர் இந்தியா ஜெட் விமானங்களை இயக்கிய நிலையில், பாக்கிஸ்தானிய மாணவர்கள் உதவி கோரி தங்களை வெளியேற்ற முறையிட்டுள்ளனர். மேலும், பாக்கிஸ்தான் அரசாங்கம் செலவுகளை மிச்சப்படுத்த அவர்களை வெளியேற்ற மறுப்பதாக பாகிஸ்தான் அரசை அவதூறாக பேசியுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலின் மையமான வுஹான் நகரத்திலிருந்து 324 இந்தியர்களை இந்தியா பாதுகாப்பாக சனிக்கிழமை வெளியேற்றியது. ஏர் இந்தியா மீட்பு நடவடிக்கைக்காக இரண்டாவது ஜெட் விமானத்தை அனுப்பி ஞாயிற்றுக்கிழமை மேலும் பல இந்தியர்களை வெளியேற்ற உள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் அரசு, கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரத்திலிருந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்றாது என்று கூறியுள்ளது. மேலும், சீனா இம்ரான்கான் அரசாங்கத்துடன் எல்லா சூழ்நிலைகளிலும் ஒற்றுமையுடன் இருக்கும் என்று கூறியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்கள், தங்களுடைய சக இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவதைக் கண்டு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் அரசாங்கத்தை அவதூறாகவும், உதவி கோரி முறையிட்டு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
உதவி கோரி கதறும் பாகிஸ்தான் மாணவர்கள்
சீனாவில் உதவி கோரி கதறிய பாகிஸ்தான் மாணவர்களின் வீடியோக்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளன. அதில், ஒரு பாகிஸ்தான் மாணவர் வுஹானில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய பேருந்தில் இந்திய மாணவர்கள் எப்படி வெளியேற்றப்படுகின்றனர் என்பதைக் காட்டியுள்ளார். பின்னர், அவர் “இதற்கு அடுத்து பங்ளாதேஷைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்படுவார்கள். பாகிஸ்தானியர்களான நாங்கள்தான் இங்கே சிக்கித் தவிக்கிறோம். எங்களுடைய பாகிஸ்தான் அரசாங்கம் நீங்கள் இருந்தாலும், இறந்தாலும், தொற்று ஏற்பட்டாலும் உங்களை வெளியேற்ற மாட்டோம் என்று கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.இந்தியர்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்” என்று வுஹான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பாகிஸ்தான் மாணவர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வுஹானில் உள்ள மற்றொரு பாகிஸ்தான் மாணவர், அதிகாரிகளிடமிருந்து அச்சுறுத்தல் வரும் என்பதால் தனது அடையாளத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். மாணவர்கள் தங்கள் தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால், அது இரண்டு நாட்களில் பதிலளிக்கவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளது. மேலும், “நாங்கள் வெளியேற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஏன் எங்களை வெளியேற்ற முடியாது? மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறிவிட்டனர். நாங்கள் சீன அரசுக்கு நன்றி கூறுகிறோம் ...ஆனால் நாங்கள் சீன அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல. நாங்கள் எங்கள் அரசாங்கத்தின் பொறுப்பு” என்று அந்த மாணவர் கூறியுள்ளார்.
வுஹானில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் 800 பாகிஸ்தானியர்கள் வரை படிக்கின்றனர். 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹான் நகரம் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்குப் பிறகு அது சீன அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி பாகிஸ்தான் தனது நாட்டினரை சீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பிரதமரின் சுகாதாரத் துறை தொடபான சிறப்பு உதவியாளர் டாக்டர் ஜாஃபர் மிர்சா தெரிவித்துள்ளார்.
ஜாஃபர் மிர்சா, சீனாவில் 4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், உலக நாடுகள் ஆகியவற்றின் மிகப்பெரிய நலனுக்காகவே நாங்கள் அவர்களை சீனாவில் இருந்து வெளியேற்றவில்லை என்று ஜாஃபர் கூறியதாக டான் நியூஸ் கூறியுள்ளது.
தனது மக்களை வுஹானில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என்ற பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவு, அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று அர்த்தமல்ல என்றும் ஜாஃபர் மிர்சா விளக்கம் அளித்தார்.
இதனிடையே, சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 324 இந்தியர்கள் சனிக்கிழமை ஏர் இந்தியாவின் ஜம்போ பி 747 விமானத்தில் புதுடெல்லியை அடைந்தனர். அவர்கள் அனைவரும் இராணுவம் மற்றும் ஐடிபிபி அமைத்த இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ அறைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் நாவல் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் பரிசோதனை செய்யப்படவில்லை.
சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டவர்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மொத்தம் 211 மாணவர்கள், 110 பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மூன்று சிறார்களை ஏற்றி வந்த விமானம் காலை 7.30 மணியளவில் டெல்லியை அடைந்தது. அவர்களில் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாசிட்டிவ் சோதனை செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.