கொரோனா எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,உலக நாடுகளில் முதல் முறையாக 2 வயதான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.
கியூபா நாட்டிலே தயாரிக்கப்பட்ட அப்தலா, சோபேரானா இரண்டு தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசிகளும் மூன்று டோஸ் கொண்டவையாகும். இந்த தடுப்பூசியில் நல்ல பலன் கிடைத்ததையடுத்து, கடந்த வாரம் வரை 11 வயது வரையிலான சிறுவர்களுக்குச் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், டெல்டா வேரியண்ட் கொரோனாவை தடுத்திட, குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது 2 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் களமிறங்கியுள்ளது.
சீனா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்ட நிலையில், கியூபா அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. அப்தலா தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 92.28% பயனளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபாவின் இந்த அப்டாலா, சேபேரானா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் உலக சுகாதார அமைப்பால் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அங்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தற்போது கியூபா குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேக்சின் போட்டு வருகிறது.
சீனா தனது சினோவாக் கொரோனா தடுப்பூசியை 6 -12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்த அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.