அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடையே நடந்த பகிரங்க மோதலுக்கு பிறகு, இவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்ட போதிலும், டொனால்ட் டிரம்ப் மஸ்க்குடன் சமரசம் செய்துகொள்ளும் எண்ணத்தை நிராகரித்துள்ளார். ஏ.பி.சி நியூஸ்ஸிடம் கூறுகையில், மஸ்க்குடன் பேசுவதில் தனக்கு "ஆர்வம் இல்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
"புத்தியை இழந்த ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?" என்று ட்ரம்ப் கூறி, மஸ்க் தன்னுடன் பேச விரும்புவதாகவும், ஆனால் தாம் அந்த உரையாடலுக்கு தயாராக இல்லை என்றும் கூறினார்.
இதனிடையே, சமரசத்திற்கான குறிப்பை மஸ்க் உணர்த்தியிருந்தார். "இருவரும் நமது நாட்டிற்காக சமாதானம் செய்து கொள்ள வேண்டும்" என்று பில் அக்மேன் (Bill Ackman) அழைப்பு விடுத்ததற்கு பதிலளித்த மஸ்க், "நீங்கள் சொல்வது தவறு இல்லை" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்ட பிறகு, வெள்ளை மாளிகை மஸ்க்குடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பை ஏற்பாடு செய்திருந்தது என்று பொலிடிகோ (Politico) செய்தி வெளியிட்டது. ஆனால், இருவருக்கும் இடையே எந்த அழைப்பும் அமைக்கப்படவில்லை என்று பல செய்திகள் தெரிவித்தன.
இந்த மோதல், சமூக ஊடகங்களில் அரங்கேறியது. டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மஸ்க் தனது வரி மற்றும் செலவின மசோதாவை விமர்சித்ததற்காக "எலான் மீது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்" என்று தெரிவித்த பின்னர் தொடங்கியது. இதற்கு மஸ்க் உடனடியாக பதிலளித்து, அதிபரின் வர்த்தக கொள்கைகள் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான டிரம்ப்பின் தொடர்புகளை மஸ்க் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக டிரம்ப் அச்சுறுத்தியதற்குப் பதிலளிக்கும் விதமாக, நாசாவால் பயன்படுத்தப்படும் தனது டிராகன் விண்கலத்தை செயலிழக்கச் செய்வேன் என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பின்னர், தனது யோசனையில் இருந்து அவர் பின்வாங்கினார்.
கடந்த வாரம் DOGE-இன் தலைவர் பதவியில் இருந்து விலகிய மஸ்க், டிரம்ப்பின் விரிவான வரி மற்றும் செலவின மசோதாவை பகிரங்கமாக கண்டித்ததிலிருந்து பதற்றங்கள் அதிகரித்து வந்தன.