எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனம் நியூராலிங்க் நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தும் வகையில் மூளையில் சிப் பொருத்துவது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் விலங்குகளிடம் மேற்கொண்ட பரிசோதனையில் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்கா அந்நிறுவனத்திடம் ஃபெடரல் விசாரணையை மேற்கொள்கிறது.
விலங்குகள் நலக் கொள்கைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளை விரைந்து செயல்படுத்த எலான் மஸ்க் அழுத்தம் கொடுத்ததாகவும், அதன் காரணமாக விலங்குகள் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்ததாக நியூராலிங்க் நிறுவன ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். இருப்பினும் விசாரணையில் இதன் பின்னணி, விவரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிறுவனம் 2018 முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 280-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள், எலிகள் மற்றும் குரங்குகள் உட்பட சுமார் 1,500 விலங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை செய்யப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்கள் இல்லை.
இருப்பினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அந்நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர்.
நியூராலிங்க் விதிமுறைகளை மீறியதா அல்லது நிலையான ஆராய்ச்சி நடைமுறைகளை பின்பற்றி செய்ததாக என விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் புதிய ஆராய்ச்சிக்கு முதலில் விலங்குகளை சோதனை செய்து தான் மனிதர்களுக்கு பயன்படுத்துவர். சோதனைகள் முடிந்தவுடன் விலங்குகள் பொதுவாக கொல்லப்படுகின்றன. சில நேரங்களில் அவை ராய்ச்சி நோக்கங்களுக்காக பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன. எனவே, விசாரணைக்கு பிறகு தான் விவரம் தெரியவரும் என அமெரிக்க காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/