/indian-express-tamil/media/media_files/2025/07/25/france-decision-2025-07-25-11-34-33.jpg)
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் தனது உரையின் போது பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இது அப்பகுதியில் அமைதியை கொண்டு வருவதற்கான ஒரு அத்தியாவசிய நடவடிக்கை என்று அவர் கூறினார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
"மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான அதன் வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் இன்றைய முன்னுரிமையாகும்; அமைதி சாத்தியமாகும்" என்று எக்ஸ் தளத்தில் மக்ரோன் குறிப்பிட்டார்.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த நடவடிக்கையை "முரட்டுத்தனமானது" என்று அழைத்ததுடன், இது மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் மற்றும் தீவிரவாத குழுக்களை ஊக்குவிக்கும் என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.
"இந்த முடிவு ஹமாஸ் பிரசாரத்திற்கு மட்டுமே உதவுகிறது மற்றும் அமைதியை தடுக்கிறது" என்று ரூபியோ குறிப்பிட்டார். "இது அக்டோபர் 7 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அவமானமாகும்" என்றும் அவர் தெரிவித்தார்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்சின் அங்கீகாரத்தை பயங்கரவாதத்திற்கு ஒரு வெகுமதியாகவும், இஸ்ரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
"இந்த சூழ்நிலைகளில் பாலஸ்தீன அரசு இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு ஏவுதளமாக இருக்கும்" என்று நெதன்யாகு கூறினார். மேலும், "பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் ஒரு நாட்டைத் தேடவில்லை; அவர்கள் இஸ்ரேலுக்கு பதிலாக ஒரு நாட்டைத் தேடுகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.
"பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தனது நோக்கம் குறித்த மக்ரோனின் அறிவிப்பு ஒரு அவமானமாகும். இது பயங்கரவாதத்திற்கு சரணடைவதாகும். ஹமாஸ்-க்கு இது ஒரு வெகுமதியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவர்கள் ஹோலோகாஸ்டிற்குப் பிறகு யூத மக்களுக்கு மிக மோசமான படுகொலையை செய்துள்ளனர். இந்த சோதனையான நேரத்தில் இஸ்ரேலுடன் நிற்பதற்கு பதிலாக, பிரான்ஸ் அதிபர் அதை பலவீனப்படுத்த செயல்படுகிறார்" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது பெரும்பாலும் ஒரு அடையாளப்பூர்வமான நடவடிக்கை என்றாலும், பிரான்ஸ் இப்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் மிகப்பெரிய மேற்கத்திய சக்தியாகும், மேலும் பிற நாடுகளுக்கும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
கிழக்கு ஜெருசலேம் மற்றும் மத்திய கிழக்கு போரில் கைப்பற்றிய பிரதேசங்களில் நீண்ட காலமாக ஒரு சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனியர்கள் நாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக அமைதி முயற்சிகள் தடைபட்டுள்ள நிலையில், காசா போர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு பாலஸ்தீன தேசத்தின் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.