அமெரிக்கா நாட்டில் நிஜத்தில் ஒரு மௌகலி சம்பவம் நடத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? 3 வயது சிறுவனை தாய் போல் பாதுகாத்தது ஒரு கரடி.
அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் இருக்கும் கிராவன் கவுண்டியில் எர்னல் நகரை சேர்ந்த 3 வயது சிறுவன் கேஸே ஹாதாவ் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான். அங்கு அருகில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கேஸே, வழிதவறி காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டான்.
குழந்தைகளுடன் விளையாடச் சென்ற கேஸே வீட்டிற்கு திரும்பவில்லை என்றதும், பெற்றோர் மற்றும் பாட்டி மிகவும் கவலையடைந்தனர். அக்கம் பக்கத்தினர் வீடு மற்றும் அவனின் நண்பர்கள் என அனைவரிடமும் சென்று விசாரித்துள்ளனர். ஆனால் நண்பர்கள் அனைவரும் அப்போதே தாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் மிகவும் பதற்றமடைந்த பெற்றோர், உடனே அருகேயுள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் இணைந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவனை பாதுகாத்த கரடி
அங்குள்ள வனப் பகுதிகளில் கருப்பு கரடிகள் அதிகமாக நடமாடி வருவது வழக்கமான ஒன்று தான். மேலும் கரடிகள் நடமாடும் இடத்திற்கு சிறுவன் சென்றிருந்து ஆபத்தானது என அறிந்த காவலர்கள், தீவிரமாக சிறுவனை தேடி வந்தனர். மேலும் அதே வனப்பகுதியில் இரவு நேரங்களில் குளிர் சுமார் 3 டிகிரி அளவில் இருக்கும், இதனை சிறுவன் எப்படி தாங்குவான் எனவும் பெற்றோர்கள் பதறிப் போனார்கள்.
சுமார் 2 தினங்களாக ஹெலிகாப்டர், பறக்கும் கேமரா என அதி நவீன வசதிகள் கொண்டு சிறுவனை தேடி வந்தனர் காவலர்களும், வனத் துறையினரும். இருப்பினும், அவர்களின் தேடுதல் 2 நாட்களாக தோல்வியிலேயே முடிந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை காட்டுப்பகுதியில் டிரெக்கிங் சென்ற பெண்ணுக்கு சிறுவனின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து, அந்த இடத்துக்குச் சென்ற பெண் அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
மிகப்பெரிய கருப்புக்கரடி ஒன்று, சிறுவனைப் பாதுகாத்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் அப்பெண்ணிம் நடமாட்டத்தை உணர்ந்தவுடன் அக்கரடி அங்கிருந்து சென்றது. அதன்பின் சிறுவன் ஹதாவேவை அழைத்துக் கொண்டு வந்து கிராவன் கவுண்டி போலீஸில் அப்பெண் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து கிராவன் கவுண்டி போலீஸ் அதிகாரி சிப் ஹக்ஸ் கூறுகையில், "வனப் பகுதிக்குள் சிக்கிய சிறுவன் ஹதாவேவை கடந்த 2 நாட்களாக ஒரு கரடி பாதுகாத்துள்ளது. ஒரு பெண் காட்டுக்குள் தனது நாயுடன் சென்றபோது சிறுவனின் அழுகுரல் கேட்டு மீட்டு வந்துள்ளார். சிறுவனை 2 நாட்களாகக் கரடி பாதுகாத்தது வியப்பாக இருக்கிறது " எனத் தெரிவித்துள்ளார்.
சிறுவன் ஹதாவே கிடைத்த மகிழ்ச்சியில் அவனின் தாய் பிரணியா ஹதாவே ஃபேஸ்புக்கில் பதிவிடுகையில், " எனது மகனை ஒரு பெரிய கரடி ஒன்று 2 நாட்களாகக் காட்டில் பாதுகாத்து வைத்துள்ளது. கடவுள்தான் அவனுக்கு ஒரு நண்பனை அனுப்பிப் பாதுகாத்துள்ளார். எப்போதாவது இதுபோல் அதிசயங்கள் நடக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.