/tamil-ie/media/media_files/uploads/2018/03/a593.jpg)
இங்கிலாந்தின் காம்ப்ரிட்ஜ் நகரில் உள்ளது ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகம். இங்கு 'International Business Strategy' பாடப்பிரிவில் பட்டம் பெற்ற போக் வாங் எனும் 29 வயது பெண், தனக்கு சரியாக பல்கலைக்கழகம் பாடம் எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, இதற்காக இந்திய மதிப்பில் 54 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகம் உயர் தரமான கல்வி கற்பிக்கப்படும் என்றும் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அதனுடைய தகவல் ஏட்டில் பொய்யாக குறிப்பிட்டு என்னை ஏமாற்றிவிட்டது. இது மிகப்பெரிய மோசடி.
அதுமட்டுமின்றி, பட்டமளிப்பு விழாவின் போது, அங்கு போதிக்கப்படும் தரமற்ற கல்வி குறித்து நான் உரையாற்றிய போது, என்னை நிர்வாகம் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியது.
இவர்களது தகவல் ஏட்டை (Prospectus) நம்பித்தான் நான் ஹாங்காங்கில் இருந்து கேம்ப்ரிட்ஜ் நகருக்கு சென்றேன். நல்ல வேலை கிடைக்கும் என நம்பினேன். ஆனால், அவர்கள் எனக்கு கொடுத்திருப்பது 'மிக்கி மவுஸ்' டிகிரியைத் தான். இரண்டு வருடங்களாக நான் இங்கு தங்கி படித்திருக்கிறேன். ஆக தங்கிய செலவு, கல்லூரிக்கு செலுத்திய தொகை என ஒட்டுமொத்தமாக 54 லட்சம் எனக்கு திரும்பித் தர வேண்டும்" என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
ஆனால், இவரின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம், பணத்தை திருப்பி அளிக்க முடியாது என கூறியுள்ளது. இருப்பினும், இவரின் இந்த நடவடிக்கைக்கு மற்ற மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பைஸ் சித்திக் என்பவர், தனக்கு மிக மோசமாக பாடம் எடுத்ததாக கூறி, ஒரு மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.