அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு எதிராக, ஹார்வர்டு பல்கலைக்கழகம் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் கல்வி மற்றும் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்வர்டு, பாஸ்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த ரத்து நடவடிக்கை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம் மற்றும் பிற ஃபெடரல் சட்டங்களின் "வெளிப்படையான மீறல்" என்று குறிப்பிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, ஹார்வர்டு தனது மனுவில், இந்த ரத்து நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கும், 7,000-க்கும் மேற்பட்ட விசா வைத்திருப்பவர்களுக்கும் "உடனடி மற்றும் பேரழிவு தரும் விளைவுகளை" ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியது.
எஸ்.இ.வி.பி (Student and Exchange Visitor Program) கீழ் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க ஹார்வர்டுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்த சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹார்வர்டில் தற்போது படிக்கும் 6,000 க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள், வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற வேண்டும் அல்லது தங்கள் சட்டபூர்வமான அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை கூறியிருந்தது.
கடந்த மாதம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், தனியார் நிறுவனத்தை வெளி அரசியல் மேற்பார்வைக்கு உட்படுத்தும் கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், இத்தகைய தடையை அமல்படுத்துவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஹார்வர்டு, 72 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தடை நீக்கப்படும் என்று நிர்வாகம் கூறியது.
சமீப வாரங்களில், ட்ரம்ப் நிர்வாகம் உயர்கல்வி நிறுவனங்களுடன் முரண்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் யூத எதிர்ப்புவாதத்தை சகித்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு பல்கலைக்கழக வரவு செலவுத் திட்டங்கள், வரி விலக்கு நிலை மற்றும் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை ஆகியவற்றை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்டு மேற்கொள்ளும் முதல் சட்ட நடவடிக்கை இது கிடையாது. ஏப்ரல் மாதம், அரசாங்கத்தின் 2.3 பில்லியன் டாலர் நிதி முடக்க முடிவை எதிர்த்து பல்கலைக்கழகம் போராடியது. இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், F-1 விசா திட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கான சான்றிதழை 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஹார்வர்டு பெற்றிருந்ததாக வாதிட்டது.
"நேற்று, அரசாங்கம் எந்தவித நடைமுறை மற்றும் காரணம் இன்றி அந்த சான்றிதழை திடீரென ரத்து செய்தது. இது ஹார்வர்டு மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட விசா வைத்திருப்பவர்களுக்கு உடனடி மற்றும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு, நிர்வாக நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் வெளிப்படையான மீறலாகும்" என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
"ஒரு உத்தரவில், அரசாங்கம் ஹார்வர்டு மாணவர் அமைப்பில் கால் பகுதியினரை, அதாவது பல்கலைக்கழகத்திற்கும் அதன் பணிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் சர்வதேச மாணவர்களை அழிக்க முற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அரசாங்கத்தின் இந்த முடிவை ஹார்வர்டு, பல்கலைக்கழகத்திற்கு "கடுமையான தீங்கு" விளைவிக்கும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டிருந்தது.