பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44-க்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் தாக்குதல் அண்டை நாட்டிலிருந்து பீரங்கித் தாக்குதலைத் தூண்டியதைத் தொடர்ந்து உலகெங்கிலும் இருந்து எதிர்வினைகள் குவியத் தொடங்கின.
'விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' - டிரம்ப் கருத்து
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறுகையில், இது அவமானகரமானது. வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போதுதான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து அறிந்தோம். கடந்தகாலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்' என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட பின்னர், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ என்.எஸ்.ஏ. அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேசினார். "இன்று பிற்பகல், ரூபியோ இந்தியா மற்றும் பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேசினார். தகவல்தொடர்பு வழிகளை திறந்துவைக்கவும், விரிவாக்கத்தை தவிர்க்கவும் அவர் இருவரையும் வலியுறுத்தினார்" என்று வெளியுறவுத்துறை எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
நிதானத்தை கடைப்பிடிக்க ஐ.நா தலைவர், ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்திய தாக்குதல்கள் குறித்து "மிகவும் அக்கறை கொண்டுள்ளார்" என்றும், அணு ஆயுதமேந்திய ஆசிய அண்டை நாடுகளிடமிருந்து அதிகபட்ச ராணுவ கட்டுப்பாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமருமான அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்கவும், பதட்டங்களை அதிகரிக்கவும், மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கவும் வலியுறுத்தினார் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' - இஸ்ரேல் ஆதரவு
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை நிகழ்த்திவிட்டு தங்களால் தப்ப முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.