இலங்கை சிங்கள சினிமாதுறையில் பிரபல நடிகரும், தற்போது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக தனக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் பணத்தை பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யூடியூப்பில் வெளியான வீடியோவில் பேசிய அவர்,
நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கான படி (ஊதியம்) பெற்றுக் கொள்ளவில்லை. அது தற்போது மொத்தம் 40 லட்சம் ரூபாயாக கிடைத்துள்ளது. இந்த பணத்தை பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க போகிறேன். நான் பராமரிக்க - அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் என்று எனக்கு யாரும் இல்லை" அதனால் "இந்தப் பணம் எனக்குத் தேவையில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கும் எனது நண்பர்கள் சொந்தமாக கப்பல்கள், ஹொலிகாப்டர்கள் வைத்துள்ளனர். ஆனால் நான் எனது போக்குவரத்துக்காக இதுவரை வாடகை வேன் ஒன்றினையே பயன்படுத்தி வருகிறேன். இதில் கடந்த முறை வாகனம் பெற்றுக் கொள்வதற்கான அரசு சார்பில் வழங்கப்பட்ட 'பெர்மிட்' மூலம் எனக்குக் கிடைத்த பணத்தை கலைஞர்களுக்கு நான் வழங்கினேன்".
அடுத்த முறையும், வாகன கொள்முதல் பெர்மிட் மூலம் கிடைக்கும் பணத்தை மக்களுக்காகவே செலவு செய்ய விரும்புகிறேன். "பெரிய வாகனங்களில் சென்று எனக்கு பழக்கமில்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை அதனால் இந்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். எனக்கு யூடியூப் சானல் உள்ளது. அதன் மூலம் மாதம் மூன்று நான்கு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த பணத்தையும் மக்களுக்குத்தான் வழங்கப்போகிறேன்.
மேலும் நான் சாதாரணமாக வாழப் பழகி விட்டதாகவும், அதனால் எனக்கு அதிக பணம் தேவைப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் பணம் தேவையானவர்கள் தனது செயலாளரைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவருடைய செயலாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தினையும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"