பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பு விழா : பாகிஸ்தான் நாட்டு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மற்றும் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். இன்று காலை பாகிஸ்தான், இஸ்லமாபாத்தில் இருக்கும் குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ஜூலை 25ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் இம்ரான் கானின் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 116 இடங்கள் பிடித்து முன்னிலை வகித்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களையும், பாகிஸ்தான் பீப்புல்ஸ் பார்ட்டி 43 இடங்களையும் பிடித்தது.
பாகிஸ்தான் பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. அதில் 172 இடங்கள் பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மக்களவை இடங்களுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் இம்ரான் கானிற்கு ஆதரவாக 176 நபர்கள் வாக்களித்தனர். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷாஹ்பாஸ் செரீப் அவர்களுக்கு 96 வாக்குகளும் கிடைத்தன.
பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பு விழா அழைப்பிதழ்
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது பதவி ஏற்கிறார் இம்ரான் கான். அவரின் நெருங்கிய கிரிக்கெட் வட்டார நண்பர்களுக்கு மட்டுமே பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியாவில் கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து, சுனில் கவாஸ்கர், மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சரும் இம்ரான் கானின் நெருங்கிய நண்பருமான நவ்ஜத் சிங் சித்து இன்று பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இஸ்லமாபாத் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட சித்து
பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பு விழா பற்றி நவ்ஜோத் சிங் சித்து
சித்து தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கும் அமைச்சராவார். இவர் நேற்று அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றுள்ளார். மேலும் இவரின் வருகைப் பற்றி பேசும் போது “நான் அரசியல்வாதியாக பாகிஸ்தானிற்கு வரவில்லை. நல்லெண்ணத்தூதராக வந்துள்ளேன். காஷ்மீர் மாநிலத்தில் செய்யப்படும் உயர் ரக பட்டாடையினை இம்ரான் கானிற்கு பரிசாக கொண்டு வந்துள்ளேன். இது அன்பின் வெளிப்பாடாகும்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.
சித்து இந்த விழா அழைப்பிதழை ஏற்றுக் கொண்டதற்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சிறிது நேரத்தில் பிரதமர் பதவியேற்பு விழா துவங்க உள்ளது. தன்னுடைய வீட்டில் இருந்து விழாவில் கலந்து கொள்ள இம்ரான் கான் கிளம்பிவிட்டார். அவருடைய மனைவி தற்போது குடியரசுத் தலைவர் இல்லத்தில் இருக்கிறார்.