அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் உள்ள இந்திய-அமெரிக்க மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தொலைவில் இருந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியுமா என்று கண்டறிய ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளார்.
இந்திய-அமெரிக்க மருத்துவரான தனுஞ்ஜயா லக்கிரெட்டி, தீவிர சிகிச்சையில் இருக்கும் 1,000 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடங்கிய 4 மாத பிரார்த்தனை ஆய்வை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
இந்த ஆய்வில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள், நிலையான பராமரிப்பு எதுவும் மாற்றப்படாது. இந்த 1000 நோயாளிகளில் தலா 500 என 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் பிரார்த்தனை செய்யப்படும். ஆனால், இதில் எந்தவொரு குழுவினருக்கும் பிரார்த்தனை குறித்து அறிவிக்கப்படாது.
தேசிய சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விளக்கத்தின்படி, நான்கு மாத ஆய்வில், கோவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவ விளைவுகளில் தொலைநிலை இடைநிலை என பல பிரிவுகளில் பிரார்த்தனை செய்யப்பட்டு அவற்றின் பங்கு குறித்து ஆராயப்படும்.
நோயாளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதி பேர், கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம், யூத மதம் மற்றும் பௌத்தம் ஆகிய ஐந்து பிரிவுகளில் உலகளாவிய பிரார்த்தனையைப் பெறுவார்கள். மற்ற நோயாளிகள் கட்டுப்பாட்டுக் குழுவாக இருப்பார்கள்.
அனைத்து நோயாளிகளும் தங்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பராமரிப்பின் தரத்தைப் பெறுவார்கள். மேலும், ஆய்வை மேற்பார்வையிட லக்கிரெட்டி மருத்துவ நிபுணர்களின் வழிநடத்தல் குழுவைக் கூட்டியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் லக்கி ரெட்டி கூறுகையில் “நாங்கள் அனைவரும் அறிவியலை நம்புகிறோம், நாங்கள் நம்பிக்கையையும் நம்புகிறோம். ஒரு அமானுஷ்ய சக்தி இருந்தால், நம்மில் பலர் நம்புகிறோம், அந்த ஜெப சக்தியும் தெய்வீக தலையீடும் ஒரு ஒருங்கிணைந்த முறையில் விளைவுகளை மாற்றிவிடுமா என்பதே எங்கள் கேள்வி”என்று கூறினார்.
நோயாளிகள் வென்டிலேட்டர்களில் எவ்வளவு காலம் இருக்கிறார்கள். எத்தனை பேர் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள், தீவிர சிகிச்சையிலிருந்து எவ்வளவு விரைவாக விடுவிக்கப்படுகிறார்கள், எத்தனை பேர் இறக்கின்றனர் என்பதை ஆய்வாளர்கள் மதிப்பிடுவார்கள் என்று லக்கிரெட்டி கூறினார்.
தன்னை இந்து மதத்தில் பிறந்தவர் என்று கூறும் லக்கிரெட்டி, தான் ஒரு கத்தோலிக்க பள்ளியில் பயின்றதாகவும், ஜெப ஆலயங்கள், பௌத்த மடங்கள் மற்றும் மசூதிகளில் நேரத்தை செலவிட்டதாகவும் கூறுகிறார்.
தங்களுக்குத் தெரியாத ஒருவருக்காக (அல்லது ஒரு குழுவினருக்காக) மக்கள் தொலைதூரத்தில் ஜெபிப்பது எவ்வாறு அவர்களின் உடல்நல விளைவுகளில் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை மருத்துவர் விளக்க முடியாது என்றும், அவரது ஆய்வு திட்டத்திற்கு அவருடைய மருத்துவ சகாக்களில் சிலர் கலவையான எதிர்வினை கொண்டிருப்பதை ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
அவர் என்ன கண்டுபிடிப்பார் என்று தனக்குத் தெரியாது என்று கூறிய லக்கிரெட்டி, “ஆனால் ம்நாங்கள் யாரையும் ஆபத்தில் ஆழ்த்துவது போல் இல்லை. ஒரு அதிசயம் நடக்கக்கூடும். எப்போதும் நம்பிக்கை இருக்கிறது, இல்லையா? ” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.