/indian-express-tamil/media/media_files/2025/03/21/IVOYdZgZv78jkxHZSGkE.jpg)
பாலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி அமெரிக்க உயர்மட்ட பல்கலைக்கழகத்தின் இந்திய ஆராய்ச்சி மாணவர் பதர் கான் சூரியை டிரம்ப் நிர்வாகம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் நேற்று (மார்ச் 20) தடை வித்தத்து. இதற்கான உத்தரவை அமெரிக்க மாவட்ட நீதிபதி பாட்ரிசியா கில்ஸ் பிறப்பித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: US judge bars deportation of Indian scholar Badar Khan Suri detained over ‘Hamas ties’
இந்த உத்தரவு, அடுத்த நீதிமன்ற நடவடிக்கைகள் வரை அமலில் இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, யூத வெறுப்பை சமூக ஊடகங்களில் பரப்பி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அவர் மீது குற்றம் சாட்டியது.
சட்டப் போராட்டம் மற்றும் உரிமைக் குழுக்களின் பதில்
சூரியின் வழக்கறிஞர் இந்த தீர்ப்பை வரவேற்றார். சூரி தனது பாலஸ்தீன சார்பு கருத்துக்கள் மற்றும் அவரது மனைவியின் பாலஸ்தீன பாரம்பரியத்திற்காக குறிவைக்கப்பட்டதாக வழக்கறிஞர் முன்பு கூறியிருந்தார்.
அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) சூரியை ஆதரித்தது, அவர் லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு "பல குடியேற்ற தடுப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டார்" என்று கூறியது.
பதர் கான் சூரி என்பவர் யார்?
இந்தியாவில் பிறந்த சூரி, 2020 இல் புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான மையத்தில் தனது பி.ஹெச்டி-யை முடித்தார். அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை, 'இடைக்கால ஜனநாயகம், பிளவுபட்ட சமூகங்கள் மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள்: ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அரச அமைப்பு பற்றிய ஆய்வு' என்ற தலைப்பில் அமைந்தது.
பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட மோதல் மண்டலங்களில் சூரி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மதம், வன்முறை, அமைதி மற்றும் இன மோதல்கள் குறித்து அவரது ஆய்வு அமைந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இது கவனம் செலுத்துகிறது. அவரது தற்போதைய ஆய்வு, மத ரீதியாக வேறுபட்ட சமூகங்களில் ஒத்துழைப்பிற்கான தடைகளை ஆராய்கிறது. மேலும், இதில் இருக்கும் சவால்களுக்கான தீர்வுகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.
மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கும் சூரி, காசாவில் பிறந்த ஒரு அமெரிக்க பெண்ணை மணந்தார். அவரது மனைவியான, Maphez Saleh என்பவர், காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இதழியலில் இளங்கலைப் பட்டமும், புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதி
காசாவில், இஸ்ரேலின் போருக்கு எதிரான பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டினர் மீது டிரம்ப் நிர்வாகத்தின் பரந்த ஒடுக்குமுறைக்கு மத்தியில் இந்த வழக்கு வந்துள்ளது. அரசியல் அதிருப்தியை அடக்குவதற்கு அரிதாகவே பயன்படுத்தப்படும் சட்டங்களை, டிரம்ப் நிர்வாகம் தவறாகப் பயன்படுத்துவதாக சிவில் உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டிய பொலிட்டிகோ அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாலஸ்தீனிய குழுவான ஹமாஸுடன் சூரிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ரஞ்சனி சீனிவாசனின் மாணவர் விசாவை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ICE) கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதிய ரஞ்சனி சீனிவாசன், சுயமாக தன்னை நாடு கடத்துவதற்கு முன்வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் மஹ்மூத் கலீலையும் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். லூசியானாவுக்கு மாற்றப்பட்ட கலீல், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.