Malala Yousafzai took to Twitter to announce that she has completed her degree at Oxford : மலாலா யூசுப் சாய், இந்த நூற்றாண்டில் மறக்க முடியாத மாபெரும் சக்தியாய் உரு பெற்ற பெண்களில் மிக முக்கியமான ஒருவர். இளம் வயதிலேயே பெண்களின் கல்விக்காகவும், தீவிரவாத ஒடுக்கத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவர். பாகிஸ்தானின் ஸ்வெத் வேலியில் பிறந்த இவர் கடந்த 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9ம் தேதி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.
அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். அவர் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வந்த காரணத்தால் அவர் இங்கிலாந்து நாட்டிலேயே தங்கும் நிலை உருவானது. அங்கேயே தங்கி படித்து வரும் அவர் 2013ம் ஆண்டு மலாலா ஃப்ண்ட் என்ற அறக்கட்டளையை துவங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களின் கல்விக்காக உதவி வருகிறார். அவருடைய சுயசரிதை புத்தகம் 2013ம் ஆண்டு வெளியானது. தன்னுடைய 17வது வயதில் மலாலா நோபல் பரிசு பெற்றார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை அவர் தக்க வைத்துள்ளார்.
எட்க்பாஸ்டோன் உயர் நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த அவர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் துறையில் பட்டபடிப்பை படித்து வந்தார். ஆக்ஸ்ஃபோர்டின் லேடி மார்க்ரெட் ஹாலில் படித்த அவர் தற்போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த மலாலா “தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் துறையில் பட்டம் பெற்றுவிட்ட மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. தற்போதைக்கு நெட்ஃப்ளிக்ஸ், புத்தகங்கள் மற்றும் தூக்கம். இதை தவிர வேறேதும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil