ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள, ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார்.
வர்த்தகம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, உயர்கல்வி, சுகாதாரம், அணுசக்தி உள்ளிட்ட பல துறைகளில் 15 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. சென்னைக்கும், ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகருக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து துவங்கவும், இந்தியா அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 20 அணு உலைகள் அமைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "ரஷ்யா, இந்தியா இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி கப்பல் போக்குவரத்து வசதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வளர்ச்சி பெறும். மேலும், விலாடிவோஸ்டோக்கில் இருந்து, சென்னை வழியாக, இந்தியாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்க உள்ளது.
ரஷ்யாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கு போதியப் பணியாளர்கள் இல்லை. இந்த புதிய கப்பல் போக்குவரத்து உறவின் மூலம், அதிக அளவிலான இந்தியர்களுக்கு, ரஷ்யாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ராணுவத் துறையில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் தொடரும். தற்போதைக்கு, 2020ம் ஆண்டுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டன. அதற்கடுத்த, 10 ஆண்டுகளுக்கான உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
தமிழகத்தின் கூடங்குளத்தில், ரஷ்யாவின் உதவியுடன் ஆறு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே, இரண்டு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கடுத்த திட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும். இதைத் தவிர, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 20 அணு உலைகள் அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு, இரண்டு தலைநகரங்களோடு மட்டும் முடிவதல்ல. இரு நாட்டு மக்களுக்கும் இடையிலானது. பல்வேறு சர்வதேச பிரச்னைகளில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.