/indian-express-tamil/media/media_files/2025/09/13/sushila-karki-2025-09-13-07-54-50.jpg)
'ஊழல் விசாரணைக்கு சம்மதித்தால் மட்டுமே ஆட்சி'... துணிச்சலான நிபந்தனையுடன் பொறுப்பேற்ற கார்க்கி!
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியின் அரசு வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு கவிழ்ந்த நிலையில், அரசியல் வெற்றிடத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி (73), நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக வெள்ளிக்கிழமை இரவு பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு அதிபர் ராம்சந்திர பௌடெல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது. இடைக்கால அரசு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு
புதிய அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இதில் குல்மான் கிசிங் புதிய எரிசக்தித் துறை அமைச்சராகவும், வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆர்யல் அமைச்சராகவும் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வாய்ப்பில்லை. கார்க்கியின் பதவியேற்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு இது உதவும் என நம்புவதாகக் கூறி, இந்தியா இடைக்கால அரசாங்கத்தின் அமைப்பை வரவேற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
"கௌரவமிகு சுஷிலா கார்க்கி தலைமையிலான நேபாளத்தின் புதிய இடைக்கால அரசாங்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்க்க உதவும் என நாங்கள் நம்புகிறோம்," என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்தது. மேலும், அண்டை நாடு, மக்களாட்சி மற்றும் நீண்ட கால வளர்ச்சிப் பங்குதாரர் என்ற முறையில், இரு நாடுகளின் நல்வாழ்வு மற்றும் வளம் பெறுவதற்கு நேபாளத்துடன் இந்தியா தொடர்ந்து நெருக்கமாகச் செயல்படும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
முன்னதாக, செப்.9 அன்று, ஷர்மா ஒலியின் அரசாங்கம் கவிழ்ந்த சில மணி நேரங்களில், பிரதமர் மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நேபாளத்தில் நடந்த வன்முறையை "இதயம் நொறுங்குவதாக" குறிப்பிட்டார். மேலும், பல இளைஞர்கள் போராட்டத்தில் உயிரிழந்தது குறித்து "வேதனை" தெரிவித்தார். நேபாளத்தின் "ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு" மிக முக்கியமானது என வலியுறுத்தி, மக்களுக்கு "அமைதிக்கு ஆதரவளிக்க" அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு
காத்மாண்டுவில், பாபுராம் பட்டாராய் தவிர மற்ற முன்னாள் பிரதமர்கள் யாரும் கார்க்கியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவர்களில் சிலர் நேபாள ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளனர். புஷ்ப கமல் தஹல் 'பிரசந்தா' தலைமையிலான மாவோயிஸ்ட் அமைப்பு, ஷேர் பகதூர் தேஉபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ், மற்றும் ஒலியின் சிபிஎன் (யு.எம்.எல்) உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள், அதிபர் பௌடெலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விழாவில் இருந்து விலகி இருந்தன.
பதவியேற்புக்கான நிபந்தனைகள்
அதிபர் பௌடெல் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயங்கினார், ஆனால் கார்க்கி அதை வற்புறுத்தினார். அரசியல் தலைவர்கள், அவர்களது வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வழிவகுத்த தெருக்களில் நடந்த வன்முறைக்கு முடிவுகட்டுவதே அவரது முதல் பணியாக இருக்கும்.
முன்னதாக, கார்க்கி ஒரு நிபந்தனையை விதித்தார். உயர்மட்ட ஊழல் மற்றும் காவல்துறையின் அதிகப்படியான வன்முறைப் பயன்பாடு குறித்து நியாயமான விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார் என்று தெளிவுபடுத்தினார்.
“எனது கைகளும் கால்களும் கட்டப்பட்டு, நான் முற்றிலும் முடக்கப்பட்டால், இந்த வேலை எனக்கு ஆர்வமாக இருக்காது,” என்று கார்க்கி கூறியதாக, அதிபர் பௌடெல் நடத்திய உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் ஷர்மா ஒலி, தேஉபா மற்றும் பிரசந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். கார்க்கியின் நிபந்தனையான, ஊழல், காவல்துறையின் அதிகப்படியான வன்முறைப் பயன்பாடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்துவதற்கு 3 முக்கிய தலைவர்களும் ஆதரவளிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அது அவர்களின் கட்சிகளின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
Gen Z போராட்டக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் காத்மாண்டு மேயர் பாலெந்திர ஷா ஆகியோர் ஏற்கனவே இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக கார்க்கிக்கு ஆதரவளித்துள்ளனர். இந்த ஜெனரல் இசட் தலைவர்கள் 3 முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை நிராகரித்ததுடன், அதிபர் தங்களையும் தங்கள் இயக்கத்தின் செய்தியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்தனர்.
அதற்குப் பிறகு, பௌடெல் மற்றும் கார்க்கி இருவரும் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். ஒரு சில மணி நேரத்தில், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், எந்தவொரு முக்கியக் கட்சியின் தலைமையும் இல்லாத ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு, பல ஜெனரல் இசட் குழுக்களையும் மற்ற தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us