/indian-express-tamil/media/media_files/2025/10/10/noble-price-2025-10-10-19-22-16.jpg)
இந்த ஆண்டிற்கான (2025) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், உலகளவில் அதிக கவனத்தை ஈர்க்கும் நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் அரசியல்வாதியான மரிய கோரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்படுவதாக நார்வேயின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஜனநாயக உரிமைகளை ஊக்குவிப்பதற்காக அவர் ஆற்றிய பணிக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் 1.17 மில்லியன் அமெரிக்க டாலர்), ஒரு டிப்ளோமா மற்றும் பதக்கம் ஆகியவற்றை அவர் பெறுவார்.
நோபல் அமைதிப் பரிசுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பல நாடுகளாலும் தலைவர்களாலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோபல் கமிட்டி அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. நோபல் கமிட்டி தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் இதுகுறித்து பேசுகையில், "நோபல் அமைதிப் பரிசின் நீண்ட வரலாற்றில், இந்த கமிட்டி அனைத்து வகையான பிரச்சாரங்கள், ஊடக அழுத்தங்கள்... அனைத்தையும் கண்டுள்ளது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கடிதங்களைப் பெறுகிறோம். எங்கள் முடிவுகளை ஆல்பிரட் நோபலின் விருப்பத்தின் அடிப்படையிலும், செய்த பணி அடிப்படையிலும் மட்டுமே எடுக்கிறோம்" என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 2009-ல் இந்தப் பரிசைப் பெற்றதைச் சுட்டிக்காட்டி, தானும் இந்தப் பரிசைப் பெறத் தகுதியானவர் என டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். ஐ.நா பொதுச் சபையில் பேசிய அவர், "நான் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். இதற்கு நெருக்கமாக எந்த ஒரு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எதையும் செய்ததில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார். நோபல் பரிசுகள் பாரம்பரியமாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என்ற வரிசையில் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டின் பிற வெற்றியாளர்களின் விவரம்:
மருத்துவம் (உடலியல்):
அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. ப்ரூன்கோவ் மற்றும் ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சாககுச்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனித நோயெதிர்ப்பு மண்டலம் (immune system) குறித்த இவர்களின் பணிக்காக இது அறிவிக்கப்பட்டுள்ளது. சாககுச்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஆராய்ச்சியின் இரண்டாம் அத்தியாயமாக அமெரிக்க விஞ்ஞானிகள் இருவரின் கண்டுபிடிப்புகள் அமைந்தன.
வேதியியல்:
ரிச்சர்ட் ராப்சன், சுசுமு கிட்டகாவா, மற்றும் ஓமர் யாகி ஆகிய மூவரும் கெளரவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 'உலோக-கரிம கட்டமைப்புகளை' (Metal-Organic Frameworks - MOF) உருவாக்கியதற்காகப் பரிசைப் பெற்றுள்ளனர். இதில் உலோக அயனிகளை மூலைக்கற்களாகவும், கரிம மூலக்கூறுகளை இணைப்புகளாகவும் கொண்டு, வாயுக்கள் அல்லது இரசாயனங்களைச் சேமிக்கக்கூடிய 'அறைகள்' கொண்ட மூலக்கூறு கட்டமைப்புகளை இவர்கள் வடிவமைத்துள்ளனர். பாலைவனக் காற்றில் இருந்து ஈரப்பதத்தைப் பிடித்து நீரைப் பெறுவது, பழங்கள் பழுப்பதைத் தாமதப்படுத்த எத்திலீன் வாயுவைப் பிடிப்பது போன்ற பயன்பாடுகளுக்கு MOF-கள் உதவுகின்றன.
இயற்பியல்:
ஜான் கிளார்க், மிக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்ட்டினிஸ் ஆகியோருக்கு 2025-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சுற்றில் 'அலகு குவாண்டம் இயக்கவியல் சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் குவாண்டம்மயமாக்கல்' (macroscopic quantum mechanical tunnelling and energy quantisation in an electric circuit) கண்டுபிடிப்புக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1980-களின் நடுப்பகுதியில் இவர்கள் செய்த பணி, குவாண்டம் கணினிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
இலக்கியம்:
ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (71) என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. "பேரழிவின் பயங்கரங்களுக்கு மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் அவரது தனித்துவமான உரைநடைக்காக" அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் 2002-ல் இம்ரே கெர்டெஸ்க்குப் பிறகு இந்த விருதைப் பெறும் இரண்டாவது ஹங்கேரியர் ஆவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.