இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் தஜூல் இஸ்லாம் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினர், கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஹசீனா நேரடியாக உத்தரவிட்டார். இதனால், ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை. ஹசினா தான் அரசின் தலைவர் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனக்கூறியதுடன் அது குறித்த வீடியோ ஆதாரm மற்றும் தகவல் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மே 12 அன்று சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. அந்த அறிக்கைதான் முதன்முறையாக, கொலைகளுக்கு உத்தரவிட்ட அதிகாரியாக ஹசீனாவை அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், பல நாட்கள் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவாமி லீக்கின் அனைத்து நடவடிக்கைகளையும் தடைசெய்த சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் மரணம் தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைமைக்கு எதிராக நடந்து வரும் போர்க்குற்ற விசாரணை மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அரசாங்கம் காரணமாகக் காட்டியது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து, டாக்காவில் உள்ள தனது இல்லத்தை காலி செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். அதே சமயம், ஊரடங்கு உத்தரவை மீறி டாக்கா தெருக்களில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர் பயணித்த ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் நுழைந்த பிறகு, சிறிது நேரம் வட்டமிட்டு, பின்னர் அகர்தலாவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஹெலிபேடில் தரையிறங்கியது. அங்கிருந்து அவர் டெல்லிக்குச் சென்று, திங்கட்கிழமை மாலை ஹிண்டனில் உள்ள இந்திய ராணுவ விமான தளத்தில் தரையிறங்கினார்.