Pakistan earthquake result Nearly 20 dead: செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல பகுதிகளில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது. ஏனெனில் பூகம்பத்தின் மையப்பகுதி நியூ மிர்பூர், பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரின் தென்கிழக்கில் 10 கி.மீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், ஸ்கர்து, கோஹாட், சர்சத்தா, கசூர், பைசலாபாத், குஜராத், சியால்கோட், அப்போட்டாபாத், மன்சேஹ்ரா, சித்ரால், மலாக்கண்ட், முல்தான், ஷாங்லா, ஒகாரா, நவ்ஷெரா, அட்டாக் மற்றும் ஜாங் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த நடுக்கம் உணரப்பட்டது.
பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கே ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல காயமடைந்தனர் என்றும் அவர்கள் விரைவாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மிர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. மேலும், அந்த பகுதியில் ஒரு மசூதியின் பகுதிகளும் பகுதி இடிந்து விழுந்ததையும் தெரிவித்துள்ளது. மிர்பூரில் பலத்த சேதமடைந்த சாலைகளின் காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பியுள்ளன. மேலும் பல வாகனங்கள் கவிழ்ந்தையும் காட்டப்பட்டது.
பாகிஸ்தானை தாக்கிய நிலநடுக்கம் 6.3 என்று அளவிடப்பட்டது. டெல்லி என்.ஆர்.சியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் சில பகுதிகளில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாலை 4.33 மணி அளவில் ஜம்மு மாகாணம் முழுவதையும் தாக்கியது. பல்வேறு இடங்களில், குறிப்பாக செனாப் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில், பூகம்பம் மிகவும் தீவிரமாக இருந்ததால் மக்கள் தங்களி வீடுகளிலிருந்து அலறியபடி வெளியே ஓடிவந்ததாக தெரிவித்தனர்.
இந்த நடுக்கம் 8 முதல்10 விநாடிகள் வரை நீடித்ததால் வலுவாக உணரப்பட்டது என்று டான்நியூஸ் டிவி தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்களை வெளியேற்றியது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், அவரும் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் சரியான நேரத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக டான் நியூஸ் டிவி தெரிவித்துள்ளது.