தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு ருவேரு (Rweru, A Rwandan Village) என்ற ருவாண்டா நாட்டு கிராமத்தை பார்வையிட சென்றிருக்கிறார்.
ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 200 பசுக்களை இந்தியா சார்பில் ருவாண்டா நாட்டிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ருவாண்டாவின் குடியரசுத் தலைவர் பால் ககமேவிடம் இத்திட்டத்தின் கீழ் பசுக்களை அளித்துள்ளார் நரேந்திர மோடி. பசுக்கள் அனைத்தையும் அந்நாட்டிலேயே விலைக்கு பெறப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
கிரின்க்கா என்ற இத்திட்டம் 2006ம் ஆண்டு ருவாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை சுமார் 3.5 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.
அரசிடம் இருந்து பெறப்படும் பசுவை ஒரு குடும்பத்தினர் பாதுகாத்து வளர்ப்பார்கள். அப்பசு பெண் கன்றினை ஈன்றுவிட்டால் அதை அருகில் இருக்கும் வீட்டினர் பெற்றுக் கொண்டு வளர்ப்பார்கள்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தன்னுடைய கருத்தினை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
ருவாண்டாவில் பசுவினை ஒருவருக்கு மற்றொருவர் தருவது என்பது ஒரு கலாச்சாரமாக பின்பற்றுகிறார்கள் ருவாண்டாவினர். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் பசுக்களை தருதல் என்பது மரியாதைக்குரிய செயலாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பு, கிகலி இனஅழிப்பு நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் மோடி.
To read this article in English
1994ல் டுட்டிஸ் என்ற இனமக்களை ஹுட்டு இன ஆட்சியாளர்கள் படுகொலை செய்ததை நினைவு கூறும் வகையில் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டது.
பசுக்களை தானமாக அளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் என்று இல்லாமல், இந்தியர்களை மிகவும் நல்ல விதமாக நடத்தி வருவதற்காக நன்றிக் காணிக்கை செலுத்தும் வகையில் இது அமையும்.
2016ஆம் ஆண்டிற்கு பிறகு மோடி இரண்டாவது முறையாக ஆப்பிரிக்காவிற்கு பயணம் செய்துள்ளார். இப்பயணத்தின் தொடர்ச்சியாக உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா செல்ல இருக்கிறார் மோடி.
இந்தியா மற்றும் ருவாண்டா நாட்டிற்கும் இடையில் வர்த்தகம், விவசாயம், பாதுகாப்பு போன்ற துறைகளில் மொத்தம் எட்டு ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.