தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவராது குடும்பத்தினர், 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதி போரில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனியும் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இலங்கை அரசு வெளியிட்ட ஊடக செய்திகளால் தெரிந்து கொண்டேன். கடந்த சில ஆண்டு காலமாக அவர்கள் உயிருடன் உள்ள செய்தியை அறிந்து கொண்டேன்.
பின்பு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உணவு அருந்திவிட்டு வந்துள்ளேன். இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா உயிருடன் இருக்கும் செய்தி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இதனை கடவுள் அளித்த வரமாக பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சர்கத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் நலின் ஹேரத், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது, போலியான நாடகம் ” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”