/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-05T095502.209-3.jpg)
சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் விவகாரம் சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக், ஒவ்வொரு மரணமும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு மரணம், அது எவ்விதத்தில் நிகழ்ந்தாலும், அது நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் போலீஸ் விசாரணையில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதுதொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கின்போது மொபைல் கடையை திறந்துவைத்திருந்ததாக, சாத்தான்குளம் போலீசாரால், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், போலீஸ் விசாரணையில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர். உடலில் பலத்த காயங்களுடன், கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மரணமடைந்தனர். இந்த விவகாரம், தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.