/indian-express-tamil/media/media_files/2025/09/02/sri-lanka-president-anura-kumara-dissanayake-visits-kacha-theevu-speech-tvk-vijay-tamil-news-2025-09-02-11-54-48.jpg)
கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார “கச்சத்தீவை எக்காரணத்திற்கும் விட்டுத்தர மாட்டேன். கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும், துப்பாக்கியால் சுடுவதும் என பல அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். இதனால், தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு, கச்சத்தீவை மீட்பதே, நிரந்தரத் தீர்வு,' என கூறியிருந்தார். மேலும், 'கச்சத் தீவை, இந்தியா திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கான, நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' எனவும் வலியுறுத்தினார்.
விஜய் பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர், 'தமிழகத்தில் தேர்தல் காலங்களில், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது, தமிழக அரசியல்வாதிகளின் வழக்கம்' எனவும் விமர்சித்து இருந்தார். இலங்கை அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் கச்சத்தீவு மீட்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இலங்கை அதிபர் அனுர குமார நேற்று இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில், வளர்ச்சி பணிகளை துவங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
இதன்பின்னர், திடீரென மாலை 5:00 மணிக்கு யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறையில் இருந்து, நான்கு ரோந்து படகுகளுடன், கச்சத்தீவுக்கு சென்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார். அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடிய அனுர குமார, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்களிடம் பேசுகையில், 'நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்' என உறுதிபட தெரிவித்தார்.
மேலும், 'இந்திய மீனவர்கள் விஷயத்தில் அதிரடியாக ஒரு முடிவெடுக்கப் போகிறேன். இனி, இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, மீன் பிடித்து இலங்கை கடல்படையிடம் சிக்கினால், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை அவ்வளவு எளிதாக விட மாட்டோம். அவர்களிடம் இருந்து பிடிபடும் படகுகளை, தற்போது வரை மனிதாபிமான அடிப்படையில் திரும்ப ஒப்படைத்து வருகிறோம். இனி அதுபோல் நடக்காது. படகு பிடிபட்டால், அது இலங்கைக்கே சொந்தமாகும்' என தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், கச்சத்தீவின் இயற்கை அழகை ரசித்த அவர், கச்சத்தீவின், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் யாழ்ப்பாணம் திரும்பினார். அங்கு பேசிய அதிபர் அனுரா குமார, "கச்சத்தீவை மையமாக கொண்டு ஒரு கருத்தாடல் நிலவி வருகிறது. அது எங்களுடைய பூமி. நான் மீண்டும் கச்சத்தீவுக்கு செல்வதை எதிர்பார்க்கிறேன். இந்த கடற்பரப்பு இந்த நிலப்பரப்பு, இந்த வான் பரப்பு எமது மக்களுக்கு சொந்தமானது.
எந்தவொரு நபரும் பலவந்தமாக அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை அடிமைப்படுத்துவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாட்டில் எந்தவொரு இடத்தில் பிறந்தாலும், எந்தவொரு மொழியை பேசினாலும், எந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், அந்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கம் என்கிற அடிப்படையில் அது எங்களுக்கு பொருந்தும். நாங்கள் அதனை நிறைவேற்றுவோம்." என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ஒருவர், கச்சத்தீவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.