மியான்மர் நிலநடுக்கம்: மத்திய மியான்மரில் இன்று (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் பாங்காக் நகர வீதிகளில் உயிர் பயத்தில் ஓடியதாக கண்காணிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Strong earthquake of 7.7 magnitude strikes Myanmar, tremors felt in Bangkok
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதன் கூற்றுப்படி, 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் மாண்டலே நகரத்திலிருந்து 17.2 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதன் காரணமாக பதற்றமடைந்த மக்கள் பாங்காக் வீதிகளில் ஓடிய காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது. மேலும், நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீரும் வெளியேறியது.
நிலநடுக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து மியான்மர் தீயணைப்பு சேவைகள் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். "விபத்து நடந்த உடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தொடங்கி விட்டோம். யாங்கூன் முழுவதும் சென்று உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்றும், சேதங்கள் குறித்தும் பார்வையிட்டோம். தற்போது, இது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
மியான்மரின் பண்டைய அரச தலைநகரான மாண்டலேயில் இருந்து வந்த சமூக ஊடகப் பதிவுகள் மூலமாக நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. அதன் பௌத்த மையப்பகுதியின் கட்டடங்கள் இடிந்து விழுந்து கிடப்பதை போன்ற வீடியோக்கள் ஏராளமாக பதிவிடப்பட்டுள்ளன. எனினும், இதன் உண்மைத் தன்மை குறித்து ராய்ட்டர்ஸ் உடனடியாக சரிபார்க்க முடியவில்லை.
"வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அசைந்து விழத் தொடங்கிய உடன், நாங்கள் வெளியே ஓடி வந்து விட்டோம். 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததை நான் பார்த்தேன். மீண்டும் கட்டடங்களுக்குள் செல்ல மக்கள் தயாராக இல்லை" என அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
பெரும்பாலும் நட்சத்திர விடுதிகளில் இருந்து வெளியேறிய மக்களின் காட்சிகள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் நீச்சல் உடையில் பதற்றமாக காட்சியளித்தனர்.
பாங்காக் நகரத்தில் உள்ள உயரமான அலுவலகக் கட்டடம் ஒன்று, குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு அங்கும் இங்குமாக அசைந்தது என்றும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மிகுந்த சத்தம் எழுப்பின என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அவசர கால படிக்கட்டுகள் வழியாக வெளியேறினர். பல தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். கட்டடம் அசையும் போது பலத்த அலறல் சத்தம் கேட்டது.
இந்த சூழலில் மியான்மரில் மட்டும் 144 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சுமார் 730-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.