இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை தனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நேற்று (மே 30) வலியுறுத்தினார். அணு ஆயுதம் கொண்ட இரு நாடுகளையும் சமாதானப்படுத்த வர்த்தக தடைகளை அச்சுறுத்தியது முக்கிய பங்காற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் நிறுத்தினோம். இது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்" என்று ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார். இந்தச் சந்திப்பில் டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் அவருடன் இருந்தார்.
ஆனால், ஓவல் அலுவலகச் செய்தியாளர் சந்திப்புடன் இந்த விவகாரம் நிற்கவில்லை. பிட்ஸ்பர்க் அருகே உள்ள யு.எஸ் ஸ்டீல்ஸ் மோன் வேலி ஒர்க்ஸ் - இர்வின் ஆலையை பார்வையிட்ட பின்னர், அமெரிக்க அதிபர் மீண்டும் கூறுகையில், "ஆயுதங்களின்றி வர்த்தகம் மூலமாக ஒரு அணு ஆயுதப் போரை நம்மால் தடுக்க முடிந்தது. இதை பெருமைக்குரிய செயலாக நான் கருதுகிறேன். அவர்கள் ஆயுதம் மூலம் இதனை செய்கிறார்கள்; நாங்கள் வர்த்தகம் மூலம் செய்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு மிக மோசமான போர் நடந்திருக்கலாம். இப்போது நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு ஆபரேஷன் சிந்தூரை இந்தியா தொடங்கியது. ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பிறகு, இரு நாடுகளும் மே 10 அன்று சண்டையை நிறுத்த முடிவு செய்ததாக அறிவித்தன.
இருப்பினும், இரு நாடுகளின் ராணுவத் தலைமைக்கு இடையேயான நேரடித் தொடர்பின் விளைவாகவே மோதல்கள் நிறுத்தப்பட்டன என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர்களுக்கு (DGMOs) இடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் இது சாத்தியமானது என்றும், "மூன்றாம் தரப்பு எதுவும் இதில் ஈடுபடவில்லை" என்றும் ஆரம்பத்திலிருந்தே தனது நிலைப்பாட்டை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதிலிருந்து மே 10 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்த முடிவு வரை, இந்திய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையே இராணுவ நிலைமை குறித்து உரையாடல்கள் நடந்தன. ஆனால் வர்த்தகம் அல்லது சுங்க வரி தொடர்பான பிரச்சனை எந்த விவாதத்திலும் வரவில்லை" என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
எனினும், மற்றொரு விளக்கத்தை டிரம்ப் கூறுகிறார். அதன்படி, "வர்த்தகம் தொடர்பாக எங்கள் பேச்சுவார்த்தை இருந்தது. அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடியவர்களுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது எனத் தெரிவித்தோம்" என்று டிரம்ப் கூறினார்.
இரு நாட்டு தலைவர்களுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். "இந்தியத் தலைவர்களுக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும், எனது மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இரு நாட்டு தலைவர்களும் புரிந்து கொண்டதால் மோதல் நிறுத்தப்பட்டது" என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தப் பங்கை இந்தியாவோ, பாகிஸ்தானோ பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், பிராந்தியத்தில் பதற்றங்களைக் குறைத்ததற்கான பெருமையை டிரம்ப் மீண்டும் மீண்டும் கோருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் கூறிய கருத்துகள், உலக அரங்கில் பேரழிவைத் தடுக்கும் மத்தியஸ்தராக தன்னை முன்வைத்து முன்பு கூறிய அறிக்கைகளை எதிரொலித்தன.