/indian-express-tamil/media/media_files/2025/10/01/us-government-2025-10-01-11-26-55.jpg)
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலக்கெடுவுக்குள் அமெரிக்க செனட்டில் கூட்டாட்சி நிதியை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடங்கிவிட்டது. நிதி மசோதாவை நிறைவேற்ற செனட்டில் 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், இறுதி வாக்கு எண்ணிக்கை 55-க்கு-45 என அமைந்ததால், புதன்கிழமை முதல் சட்ட அமலாக்கம் போன்ற அத்தியாவசியமான செயல்பாடுகளைத் தவிர மற்ற அனைத்து அமெரிக்க அரசாங்க நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தால், அறிவியல் ஆராய்ச்சி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பிற அத்தியாவசியமற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் கூட்டாட்சி நிறுவனங்களின் அலுவலகங்கள் மூடப்படும். இதன் விளைவாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஊதியமின்றி விடுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பிற “அத்தியாவசியம்” என்ற குடையின் கீழ் வரும் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள், ஆனால் காங்கிரஸ் இந்த மோதலைத் தீர்க்கும் வரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. காங்கிரஸினல் பட்ஜெட் அலுவலகத்தின் (CBO) மதிப்பீட்டின்படி, ஒரு நாளைக்கு சுமார் 7,50,000 கூட்டாட்சி ஊழியர்கள் ஊதியமில்லா விடுப்பில் (furloughed) அனுப்பப்படலாம், இதனால் ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. எஃப்ஏஏ (FAA) இல் உள்ள 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதாவது அதன் ஊழியர்களில் சுமார் கால் பகுதியினர், ஊதியமில்லா விடுப்பில் அனுப்பப்படலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்
இந்த முடக்கத்திற்கு குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர். குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் பட்ஜெட்டைக் கைதியாக வைத்திருப்பதாகவும், சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினரோ, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பையும், குடியரசுக் கட்சியினரையும் இந்த முடக்கத்திற்குப் பழிகூறினர், மேலும் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பைப் பாதுகாக்க அவர்கள் விரும்பவில்லை என்று குற்றம் சாட்டினர். வெள்ளை மாளிகையின் இணையதளம் கூட இந்த முடக்கத்தை "ஜனநாயகக் கட்சி முடக்கம்" என்று குறிப்பிட்டு ஒரு கவுண்டவுன் கடிகாரத்தை வெளியிட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க காங்கிரஸ் அரசாங்கத்தை 15 முறை முடக்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தன. இருப்பினும், டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் ஏற்பட்ட முடக்கங்களில், 2018 டிசம்பரில் ஏற்பட்ட 35 நாட்கள் முடக்கம் தான் மிக நீண்டதாகும், இது 8,00,000 கூட்டாட்சி ஊழியர்களில் 3,40,000 பேரைப் பாதித்தது. தற்போதுள்ள அரசியல் சூழலில், அரசாங்க முடக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.