விமானத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அமெரிக்க பெண் பயணி ஒருவர் சுமார் 5 மணி நேரம் கழிவறையிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தை சேர்ந்த மரிசா ஃப்டியோ, ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி, சிகாகோவில் இருந்து ஐஸ்லாந்து செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார்.
விமானம் ஏறிய அரை மணி நேரத்திற்குள் தோண்டை வரண்டு இருந்ததால், உடனடியாக கழிவறைக்கு சென்று ரெபிட் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, கொரோனா பாதிப்பு பாசிட்டிவ் என வந்துள்ளது.
விமானம் ஏறுவதற்கு முன்பு, மரிசா 2 முறை பிசிஆர் பரிசோதனை மற்றும் 5 முறை ரேபிட் பரிசோதனை செய்துள்ளார். இந்த அனைத்து பரிசோதனையிலும் மரிசாவுக்கு நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. ஆனால், விமானம் ஏறி அரை மணி நேரத்திற்குள் தோண்டை வரண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மரிசா பூஸ்டர் டோஸ் உள்பட 3 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர். தடுப்பூசி செலுத்ததாக மக்களிடம் பணியாற்றுவதால், தொடர்ச்சியாக சோதனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், " ரெபிட் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் வந்ததும் பயந்துவிட்டேன். முதலில், விமான பணிப்பெண் ராக்கியிடம் ஓடிச்சென்று விஷயத்தை கூறினேன். சிறிய நேரத்துக்கு முன்பு உணவு சாப்பிட்ட எனது குடும்ப உறுப்பினர்களையும், விமானத்தில் பயணிக்கும் சக பயணிகளையும் நினைத்து கவலைப்பட்டேன்.
என்னை தனிமைப்படுத்தி உட்கார வைக்க, இருக்கையை சீரமைக்க ராக்கி முயற்சித்தார். ஆனால் விமானம் நிரம்பியிருந்ததால், தனிமைப்படுத்த போதுமான இருக்கை இல்லை என கூறினார். தன்னால் பிறர் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டக்கூடாது என்பதற்காக விமானத்தின் கழிவறையிலேயே அமர்ந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்தேன்.
அதற்கு சம்மதம் தெரிவித்த ராக்கி, என்னை கழிவறைக்குள் அமர வைத்துவிட்டு, பிறர் பயன்படுத்தாத வகையில் out of service பலகை வெளியே வைத்துவிட்டார்" என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறுகையில், இது போல ஒரு விஷயம் நடப்பது ஒருவித நெருக்கடியாகவே இருக்கிறது. இருப்பினும் எங்கள் பணியில் இது சகஜமானது" என்றார்.
விமானம் ஜஸ்லாண்டில் தரையிறங்கியதும், மரிசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது சகோதரர், தந்தைக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. ஆனால், மரிசாவுக்கு மீண்டும் ரெபிட் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு உறுதி என வந்துள்ளது. உடனடியாக அவரை ஹோட்டல் ஒன்றில் 10 நாள்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil