தமிழரின் பாரம்பரிய பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது வள்ளுவர் கோட்டம். அப்பெருமை கடல் கடந்து உலகளவில் அங்கீகரிக்கும் முறையில் மியன்மரில் உருவாகுகிறது மற்றொரு வள்ளுவர் கோட்டம்.
வள்ளுவர் கோட்டம், சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில், திருவள்ளுவரின் நினைவாக வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்நினைவகத்திற்கு,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இப்பணி நிறைவு பெற்றது. வள்ளுவர் கோட்டத்தின் முக்கிய அம்சம் கோவில் போல் அமைக்கப்பட்டுள்ள தேர் ஆகும்.
இத்தேரின் அடிப்பகுதி 7.5 x 7.5 மீட்டர் அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. மேலும் 7 அடி உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. இதன் மேற்கூரை மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. இக்கூரை, திருக்குறளின் மூன்று பால்களாகிய அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் அமையவுள்ள வள்ளுவர் கோட்டம்:
தமிழகம் முழுவது திருவள்ளுவரின் பெருமையை சுட்டிக்காட்டும் விதமாக மண்டபங்களும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உலகளவில் வள்ளுவர் நினைவகம் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். வெளிநாட்டில் அமையப்போகும் வள்ளுவர் கோட்டம் முதன் முறையாக இடம் பெறப்போவது மியான்மரில் தான். மியான்மரின் தாட்டான் நகரத்தில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியாகவே உருவாகி வருகிறது. மே மாத திறக்கப்பட இருக்கும் இக்கோட்டத்திற்கு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
மியான்மரின் தலைநகரமான யாங்கனில் இருந்து 230கிமீ தொலைவில் உள்ள தாட்டான் பகுதியில், சுமார் 9600 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 1990-ம் ஆண்டு துவங்கிய நிலையில் அதிகாரப்பூர்வமாக வரும் மே-1ம் தேதி திறக்கப்படும். மேலும் தேரின் கருவில் வைக்கப்படும், 5 அடி உயரம் உள்ள பளிங்கு திருவள்ளுவரின் சிலை; இரண்டு சகாப்தங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டு கடல் வழியாக மியான்மர் கொண்டுவரப்பட்டதாகும்.
மேலும் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கும் மியான்மாரில் அமைக்கப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்திற்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. அதோடு, இந்தத் தளம் மியான்மரின் வசிக்கும் தமிழர்கள் திருக்குறள் மற்றும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள பயிற்கூடமாக அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கி வசிக்கும் தமிழர்கள் தனது தாய்மொழி தமிழில் பேசினாலும், 25 சதவிதத்தினருக்கு மட்டுமே தமிழை எழுதப் படிக்க தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மியான்மர், தாட்டாம் பகுதியில் வசிக்கும் சுமார் 15 ஆயிரம் தமிழர்கள் இங்கு வந்து திருக்குறள் கற்றுக்கொள்கிறார்கள். என்று கூறப்படுகிறது. கடல் கடந்து வாழும் தமிழின் பெருமையும், தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை கொண்டாடும் நாளாக மே-1 அமைந்துள்ளது.