/indian-express-tamil/media/media_files/2025/03/25/Lcdl1q5LD6knKiylKgOD.jpg)
ஏமனில் உள்ள ஹூதி ஆயுதக் குழு மீதான தாக்குதல்களுக்கான ரகசிய அமெரிக்க இராணுவத் திட்டங்களைப் பற்றிய தனிப்பட்ட உரையாடல் ஒன்றில், தற்செயலாக ஒரு பத்திரிகையாளரை இணைத்ததன் மூலம் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதிர்ச்சியூட்டும் தவறைச் செய்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Houthi PC small group’: Top Trump administration officials ‘accidentally’ share Yemen war plans with journalist
தி அட்லாண்டிக்கின் ஆசிரியராக பத்திரிகையாளர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் பதவி வகிக்கிறார். இவர் தவறுதலாக "ஹூதி பிசி ஸ்மால் க்ரூப்" என்ற சிக்னல் உரையாடல் குழுவில் சேர்க்கப்பட்டார். அக்குழுவில் மூத்த அதிகாரிகள், ஏமன் மீதான உடனடி அமெரிக்க தாக்குதல்கள் உட்பட வகைப்படுத்தப்பட்ட ராணுவ திட்டங்களை விவாதித்தனர்.
இந்த சிக்னல் என்ற செயலி உரையாடலை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் கபார்ட் ஆகியோர் தங்கள் திட்டங்களை விவாதிக்க பயன்படுத்தியுள்ளனர். இந்த தகவல் தி கார்டியனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்பின் 18 மூத்த நிர்வாக குழு உறுப்பினர்களுடன் "ஹவுத்தி பிசி ஸ்மால் குரூப்" என்ற சிக்னல் குழுவில் தானும் சேர்க்கப்பட்டதை தி அட்லாண்டிக்கின் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் அறிந்து கொண்டார். இந்நிலையில், சி.ஐ.ஏ அதிகாரி குறித்த விவரங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை தான் விரைவாக நீக்கியதாக தனது அறிக்கையில் ஜெஃப்ரி கோல்ட்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ், இந்த விஷயங்கள் உண்மையானவை என்பதை தி கார்டியனுக்கு உறுதிப்படுத்தினார். "இது ஒரு உண்மையான செய்தி. இந்த உரையாடலில் தவறான எண் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்று ஹியூஸ் கூறினார். குழுவில் இருந்து செய்திகள் "ஆழமான மற்றும் சிந்தனைமிக்க கொள்கை ஒருங்கிணைப்பு" சார்ந்தவை என்று குறிப்பிட்ட அவர், ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் அட்லாண்டிக்கின் பெரிய ரசிகன் அல்ல" என்று அவர் பதிலளித்தார். பின்னர், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், டிரம்ப் இன்னும் தனது தேசிய பாதுகாப்புக் குழுவில் "அதிக நம்பிக்கை" கொண்டுள்ளார் என்று வலியுறுத்தினார்.
கசிந்த செய்திகள் சில முக்கிய உரையாடல்களையும் வெளிப்படுத்தின. தி கார்டியனின் கூற்றுப்படி, உலகளாவிய கப்பல் வழித்தடங்களை பாதுகாக்கும் வேலையை அமெரிக்கா சுமப்பது குறித்து வான்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.
இந்த பாதுகாப்பு விதிமீறல், நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்படி அரங்கேறியது என்று விசாரிக்க வேண்டும் என ஜனநாயக பிரதிநிதியான பாட் ரியான் அறிவுறுத்தியுள்ளார்.
நீண்டகால தேசிய பாதுகாப்பு பத்திரிகையாளரான ஷேன் ஹாரிஸும் கடுமையாக விமர்சித்துள்ளார். "தேசிய பாதுகாப்பை உள்ளடக்கிய 25 ஆண்டுகளில், இதுபோன்ற ஒரு நிகழ்வை நான் பார்த்ததில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தவறு குறித்து வெள்ளை மாளிகை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இத்தகைய தவறு எப்படி நிகழ்ந்தது என்றும், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.