உக்ரைனில் நகர மேயர்கள் 11 பேரை ரஷ்ய ராணுவம் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் இரினா வெரெஸ்சுக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கிவிவ், கெர்சன், கார்கிவ், ஜபோரிஸ்சியா, மைகோலைவ், டோன்ட்ஸ்க் உள்பட 11 நகர மேயர்களை ரஷ்ய ராணுவத்தினர் கடத்திச் சென்றுவிட்டனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. அமைப்பு உள்பட சர்வதேச அமைப்புகளிடம் புகார் அளித்திருக்கிறோம். பொதுமக்களில் சிலரும் காணாமல் போயிருக்கின்றனர்.
மோடிஜின் நகர மேயர் மற்றும் அவரது கணவரை ரஷ்ய படைகள் கொலை செய்துவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு
சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.
நேற்று ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா உறுதியானது. 7,788 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தாக்குதல் உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும்.
இங்கு கொரோனா பாதித்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் தனித்தனி தனிமை மையங்களில் வைப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நகரத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகர் சாக்ரமென்டோ. நேற்று அதிகாலை நேரத்தில் அங்கு உணவகங்கள் மற்றும் பார்கள் நிரம்பியுள்ள பகுதியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதன்காரணமாக, தெருக்களில் மக்கள் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர். சம்பவ பகுதிக்கு ஏராளமான ஆம்புலன்சுகள் விரைந்தன.
இந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன இதன் பின்னணியோ, கூடுதல் தகவல்களோ வெளிவரவில்லை. இந்தப் பகுதியை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
வங்கதேசத்தில் பொட்டு வைத்த பெண்ணுக்கு அச்சுறுத்தல்
வங்கதேசத்தில் பொட்டு வைத்துக் கொண்டு கல்லூரியில் பணிக்குச் சென்ற பேராசிரியரியை போலீஸார் அச்சுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
லோதா சுமாதர் என்ற பேரிசிரியை டாக்காவில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம்போல் கல்லூரிக்கு பணிக்குச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் போலீஸ் சீருடையில் வந்த நபர் அவரை இடைமறித்து பொட்டு வைக்கக் கூடாது என்று அச்சுறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: நள்ளிரவில் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா… இலங்கையில் பதற்றம்
இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "போலீஸ் சீருடையில் இருந்த நபரின் பெயரை பேராசிரியை தெரிவிக்கவில்லை. ஆனால், இருசக்கர வாகனத்தில் எண்ணை புகாரில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil