1.பாகிஸ்தான் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2. உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு WHO அழைப்பு
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 4 லட்சம் உயிர்களைப் பறிக்கும் மலேரியா நோய்க்கு எதிராக முதல் தடுப்பூசியை உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ளது. RTS,S/AS01 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, முதற்கட்டமாக மலேரியா தாக்கம் அதிகம் உள்ள ஆப்ரிக்க நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்த தடுப்பூசியை ஜிஎஸ்கே மருந்து நிறுவனம் (GSK pharmaceutical company) நிறுவனம் தயாரித்துள்ளது. இதை கடந்த 2019ம் ஆண்டு முதல் சோதனை முயற்சியாக கானா, கென்யா ஆகிய நாடுகளில் சுமார் 8 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3. பண்டோரா பேப்பர்ஸ்: சொத்துகளை வாங்கி குவித்துள்ள லெபனானின் அரசியல் வாதிகள்
பண்டோரா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் வெளியான ஆவணங்களை ஆராய்வதில், லெபானின் அரசியல் வாதிகள் மற்றும் வங்கியில் பணியாற்றுவோர் அதிகளவிலான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதே சமயம், கடந்த 2 ஆண்டுகளாக லெபானன் நாட்டு பணம் அதன் மதிப்பை 90 விழுக்காடு இழந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அங்கிருக்கும் மக்கள், சேமிப்பு பணம் இல்லாததால், வாகனங்களுக்கு எரிசக்தி, மருந்து செலவு போன்றவற்றில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

4. கருக்கலைப்பு செய்ய தடை சட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருவில் இருக்கும் சிசுவுக்கு இதய துடிப்பு கண்டறியப்பட்டால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி கருவுக்கு 6 வாரம் நிறைந்தால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க உச்சநீதிமன்றமும் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கி உள்ளது. இதனை கண்டித்து மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏரளாமான பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கருக்கலைப்பு தடை சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க டெக்சாஸ் நீதிபதி ராபர்ட் பிட்மேன் உத்தரவிட்டுள்ளார்.
5.முன்னாள் மனைவியை கண்காணிக்க பெகாசஸை பயன்படுத்திய துபாய் இளவரசர்
துபாய் இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், தனது முன்னாள் மனைவி செல்போனையும்,அவரதுவழக்கறிஞர்கள் செல்போனையும் கண்காணிக்க பெகாசஸ் செயலியை பயன்படுத்த உத்தரவிட்டதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கண்காணிக்க உதவும் இத்தாலி நிறுவனம் தயாரித்த பெகாசஸை, முன்னாள் மனைவி, அவரது தந்கை, மேலும் நெருக்கமானவர்களை கண்காணிக்க உபயோகித்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தினால் கண்காணிக்கப்பட்ட பெண் வேட்டையாடப்பட்டதாகவும் பாதுகாப்பின்றியும் உணர்கிறாள் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil