உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் போர் அனைவரும் அறிந்திருப்போம். ஒரு மாதத்துக்கு மேலாக உலகின் மிகப் பெரிய ராணுவத்தை உக்ரைன் சமாளித்து வருகிறது.
இதற்கு மேற்கத்திய நாடுகளின் உதவிகள் ஒரு காரணமாக இருந்தாலும், உக்ரைன் வீரர்கள் தீரத்துடன் போரிடுவதும் அதைவிட முக்கியமான காரணமாகத் திகழ்கிறது.
அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் வீரர்கள் ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில் கருங்கடல் பகுதியில் ஸ்நேக் தீவை கைப்பற்றும் முனைப்புடன் வந்த ரஷ்ய ராணுவ வீரர்களை ரோமன் கிரிபோவ் என்ற ராணுவ வீரரின் தலைமையிலான படை விரட்டி அடித்தது.
ஒழுங்கு மரியாதையாக உங்கள் நாட்டுக்கு ஓடிவிடுங்கள் என்று ரஷ்ய ராணுவத்தை நோக்கி அவர் கூறிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், அந்த ராணுவ வீரரை அழைத்து உக்ரைன் பாதுகாப்புத் துறை கெளரவித்துள்ளது.
இலங்கையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைப்பு
இலங்கையில் கடுமையான மின்வெட்டு இருப்பதாலும், உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்பதாலும் தினசரி நடக்கும் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் சில மருத்துவமனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியிருக்கிறது.
தினமும் 10 மணி நேர மின்வெட்டு இருந்து வருகிறது. சமையல் எரிவாயு, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உயிர் காக்கும் மருந்துகளும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதால் தினசரி நடக்கும் அறுவை சிகிச்சைகளையும் சில மருத்துவமனைகள் நிறுத்தி வைத்துள்ளது அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.
பாலினத்தை மாற்ற விரும்பும் இங்கிலாந்து எம்.பி.
இங்கிலாந்தில் பிரதமர் போரீஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜேமி வால்லிஸ் தனது பாலினத்தை மாற்ற விரும்புவதாக பொதுவெளியில் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
37 வயதாகும் இவர், இளம் வயதிலிருந்து தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து வருவதாக தெரிவித்தார்.
எனவே, தற்போது தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும், அரசியலுக்கு முழுமையாக முழுக்கு போட இருப்பதாகவும் இவர் தெரிவித்தார். இவர் இதுபோன்ற அறிவித்ததற்கு அதிக தைரியம் வேண்டும் என்று பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்தார்.
இலங்கையில் அதிகரிக்கும் மின்வெட்டு… அந்நிய செலாவணி வீழ்ச்சியால் எரிபொருள் இறக்குமதிக்கு சிக்கல்
விண்வெளியில் 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த வீரர்
அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி கேப்சூலில் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பினார்.
நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய். இவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார்.
இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய், கஜகஸ்தானில் ரஷிய விண்வெளி காப்ஸ்யூலில் பூமிக்கு திரும்பினார்.
அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil