மத்திய அரசைக் கண்டித்து திருச்சி-சென்னை வைகை ரயிலை காவிரி பாலத்தில் மறித்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து சென்னை சென்ற வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது காவிரி ஆற்றின் பாலத்தில் அதிவேகமாக வந்த ரயிலை எதிர்திசையில் திருச்சியில் ஆற்று பாலத்தில் மறித்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்த விபரம் வருமாறு, தமிழகத்தில் இருந்து பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் ஒன்றிய அரசின் சார்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங்சவுகான் பிரகலாத் ஜோஷி ஆகியோர் தலைமையில் தேசிய விவசாய சங்க தலைவர்களை அழைத்து 3-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப்பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படாத நிலையில் மீண்டும் போராட்டக்களத்திற்கு விவசாயிகள் திரும்புகையில், பஞ்சாப் காவல்துறை, மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் விவசாய சங்க தலைவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பஞ்சாப் சம்பு பார்டர் மற்றும் கநூரி பார்டர் போராட்டக்களத்தில் இருந்த கூடாரங்களை அதிரடியாக காலி செய்தனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்து விவசாயிகளை சிறையில் அடைத்ததை கண்டித்தும், பாரத பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் 50 % சேர்த்து எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் அறிக்கையின்படி விலை நிர்ணயம் செய்யப்படும்.
கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று 12 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றாமல் இருந்து வருவதை கண்டித்தும், கோரிக்கை நிறைவேற்றக் கோரியும் மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ரயில் பாலத்தில் வைகை அதிவிரைவு ரயிலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் நிறுவனரும், தேசியத் தலைவருமான அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கொடிகளுடன் ரயிலுக்கு எதிர் திசையில் கூட்டமாக வந்து காவிரிப்பாலத்தில் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை அதிவிரைவு ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 நிமிடம் காவிரி பாலத்தில் ரயில் நின்றது.
பின்னர் மறியல் போராட்டம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் மற்றும் திருச்சி போலீஸார் விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 20 விவசாயிகள் கைது செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
திருச்சி-சென்னை ரயில் வழித்தடத்தில் காவிரி பாலத்தில் திடீரென அதிவேகமாக வந்த ரயிலை மறித்த விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்