கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பாக, ஊட்டிக்கு இ-பாஸ் நடைமுறையில் வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மலர் கண்காட்சிகள் நடைபெறவுள்ளதால் இந்தக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
அதன்படி, கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே நடைமுறையுடன் கொடைக்கானலுக்கு செல்ல கூடுதலாக 300 வாகனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.