/indian-express-tamil/media/media_files/2025/06/11/YQ8dO7SNtyRV6KxM5FyR.jpg)
ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில் நிலையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில், தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது இடைத்தரகர்களின் குறுக்கீடு காரணமாக சாமானிய மக்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில், தட்கல் டிக்கெட்களில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாகவும், மோசடி நடப்பதைத் தடுக்கும் விதமாகவும் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஜூலை 1ஆம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன் பின்னர், ஜூலை 15-ம் தேதி முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP) அங்கீகாரமும் கட்டாயமாக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பிஆர்எஸ் (PRS) கவுண்டர்கள் (அ) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பயனர் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP அங்கீகாரத்திற்குப் பிறகுதான் தட்கல் டிக்கெட் முன்பதிவு வழங்க முடியும். 15-07-2025 முதல் செயல்படுத்தப்படும். இந்திய ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதாவது, ஏசி இல்லாத வகுப்புகளுக்கு காலை 10 முதல் 10: 30 மணி வரையிலும், ஏசி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 முதல் 11: 30 மணி வரையிலும் தொடக்க நாள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிஆர்ஐஎஸ் (CRIS) மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) ஆகியவை அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் இதை அறிவிக்கப்பட்டு, அமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யும். பொதுமக்கள் தகவலுக்காக மேற்கண்ட மாற்றங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பரவலான விளம்பரம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆதார் அங்கீகாரம் என்றால் என்ன?:ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு உங்களுடைய பெயர் ,பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களையும் உங்களுடைய அடையாளங்களையும் சரி பார்க்கவே இந்த ஆதார் அங்கீகார முறை பயன்படுத்தப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள அமைப்பு நம்முடைய ஆதார் எண்ணில் கைரேகை, கருவிழி , பெயர், பாலினம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறது. எனவே அந்த தகவலை அடையாள சரிபார்ப்புக்கு உறுதி செய்ய நாம் நம்முடைய அனுமதியை வழங்க வேண்டும்.
எப்படி தட்கல் டிக்கெட் பதிவு செய்வது? : முதலில் https://www.irctc.co.in/nget/train-search தளத்தில் பயனர் பெயர், பாஸ்வேர்டு கொண்டு லாகின் செய்ய வேண்டும். புறப்படும் ரயில் நிலையம் , சேரும் ரயில் நிலையம், பயண தேதி, வகுப்பு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். quota பிரிவில் தட்கல் டிக்கெட் என்பதை தேர்வு செய்ய வேண்டும், நீங்கள் குறிப்பிட்ட பகுதி வழியே செல்லும் ரயில்கள் அதில் காண்பிக்கும். உங்களுக்கு தேவையான வகுப்பு மற்றும் ரயிலை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் "Book Now" என்பதை கிளிக் செய்ய வேண்டும். பயணியின் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். சரிபார்ப்பு குறியீடை உள்ளிட்டு மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். Continue என்பதை தேர்வு செய்தால் டிக்கெட் விவரங்களும் கட்டணங்களும் காண்பிக்கும். அனைத்தையும் பார்த்து உறுதி செய்த பின் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய உடன் டிக்கெட் பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் திரையில் காட்டும். தொலைபேசி எண்ணுக்கும் தகவல் வந்துவிடும். இனி தட்கல் முன்பதிவின் போது கூடுதலாக உங்களின் ஆதார் எண் கேட்கப்படும், அத்துடன் உங்கள் தகவல்களை பெற உங்களின் அனுமதி கேட்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அந்த ஓடிபியை உள்ளிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் பதிவு செய்யப்படும். இது கட்டணம் செலுத்துவதற்கு முன்னரே கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.