இன்று (11.8.18) ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு பக்தரர்கள் பலரும் கோயில்களில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை என்றால் என்ன?
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். இந்த நாட்களில் முன்னோர்களையும் இறந்த தாய், தந்தையர்களை நினைத்து ‘திதி’ கொடுப்பது நல்லதாக பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி, மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
முன்னோர்களுக்கு திதி
ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:
1. ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
2. பின்பு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
3. வீட்டில் இருக்கும் பெண்கள் காலை சாப்பிடாமல் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து பெரியவர்களை அழைத்து சாப்பாடு அளிக்க வேண்டும்.
4. இப்படி செய்தால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
5. முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுத்து, புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபட்டு சிறப்பு பூஜைகள்செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, கோடியக்கரை, பவானி, திருச்சி அம்மா மண்டபம், திலதர்ப்பணபுரி ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஆடி அமாவாசை வழிபாட்டில் திரளான மக்கள் கலந்துக் கொண்டு தங்களின் முன்னோர்க்கு திதி கொடுத்து வருகின்றனர்.