/indian-express-tamil/media/media_files/2025/05/29/v7cXeWJGVUBKs1zPH2ky.jpg)
Actor Rajesh Death
நடிகர் ராஜேஷ் காலமான செய்தி தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், அவரது நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல மருத்துவர் டாக்டர் சொக்கலிங்கம், நடிகர் ராஜேஷ் உடனான தனது நினைவுகளையும், அவரது மறைவுக்கான காரணங்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்களையும் கலாட்டா வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
”நடிகர் ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு, தனிப்பட்ட இழப்பல்ல, குடும்பத்துக்கான இழப்பல்ல, இது உலகத்திற்கே ஏற்பட்ட ஒரு பேரிழப்பு. ஒரு நல்ல மனிதரை, 50 ஆண்டுகளுக்கும் மேலான நண்பரை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.
அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அவரது படங்கள் மூலமாகவே உணர்ந்தேன். நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பாடுபடும் அவர்களுக்குள் இருக்கும் அழுத்தம், வெளியில் தெரிவதில்லை. ராஜேஷ் ஒரு அற்புதமான மனிதர். சினிமா பற்றி என்னிடம் பேசுவார், பல ஆலோசனைகளைப் பெறுவார், கட்டி அணைப்பார், என் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை, மன உளைச்சலில் இருந்ததை, இன்னும் ஆழ்ந்து கவனித்திருந்தால் கண்டறிந்திருக்க முடியும். அல்டிமேட்டாக, அவருக்கு மன உளைச்சல் இருந்திருக்கிறது, அவர் மன அமைதியை இழந்திருக்கிறார், ஏதோ ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மனதில் கவலை குடிகொள்ளும்போது, கொலஸ்ட்ரால் படிய ஆரம்பிக்கிறது.
துணையாக இருந்த கணவன் அல்லது மனைவியை இழப்பது பெரும் துயரம். இது பெரும் மன அழுத்தத்தை (negative stress) ஏற்படுத்துகிறது, உடனடியாக கொலஸ்ட்ரால் படிய ஆரம்பித்துவிடும். தீவிர மன அழுத்தம் (acute stress) இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தூண்டும். பிரிந்து வாழும் சூழ்நிலை மிகவும் கடினமானது, இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும். தனிமை என்பது ஒரு பெரிய கொடுமை என்பதை நான் உணர்கிறேன்.
ராஜேஷ் அடிக்கடி உடல்நலப் பரிசோதனைக்கு வந்ததில்லை. அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார், ஆனால் மருத்துவப் பரிசோதனையைத் தவிர்த்துவிடுவார்.
இதய ஆரோக்கியத்தின் மூன்று மந்திரங்கள்
75 வயதில் காலையில் அவர் இறந்த செய்தி கேட்டு வருந்தினேன். 75 வயதில் மரணம் நேர்ந்தால் நாம் அதிர்ச்சியடைகிறோம். ஆனால் இந்தியாவில், 25 வயதிலேயே ஆண், பெண் இரு பாலரும் மாரடைப்பால் இறக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 90 பேர் இறக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.
இதய ஆரோக்கியத்திற்கு மூன்று மந்திரங்கள் உள்ளன:
சீரான எண்ணம்: நம் எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்.
சீரான உணவு: ஆரோக்கியமான, சீரான உணவை உண்ண வேண்டும்.
சீரான உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த மூன்று மந்திரங்களைக் கடைப்பிடித்தால், இதயத்தின் ஆயுளை நீட்டிக்க முடியும். இதயம் 125 வருடங்கள் இயங்குவதற்காகப் படைக்கப்பட்டது. ஆனால் 100, 80, 70 வயதிலேயே மரணம் நேர்வதற்கு இந்த மூன்று மந்திரங்களைக் கடைப்பிடிக்காததே காரணம்.
கொலஸ்ட்ரால் மற்றும் மன அழுத்தம்
கொலஸ்ட்ரால் என்பது ரத்தக்குழாய்களில் இருக்க வேண்டிய ஒன்று. அது இருந்தால் தான் நாம் உயிர் வாழ முடியும். கொலஸ்ட்ரால் மகிழ்ச்சியாக இருக்கும் வரை இரத்தத்தில் சீராக ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் மனதில் கவலைப்படும்போது, கொலஸ்ட்ரால் படிய ஆரம்பிக்கிறது. கொலஸ்ட்ரால் படிவதற்கு 100% மகிழ்ச்சி இழப்பதே காரணம். கொலஸ்ட்ரால் படிவதற்கு 15-20 வருடங்கள் ஆகும். ராஜேஷுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். மன அழுத்தம் இருந்திருக்க வேண்டும்.
சந்திரபாபு முதல் விவேக் வரை பல நகைச்சுவை நடிகர்கள் என்னுடைய நண்பர்கள், நோயாளிகள். அவர்கள் உலக மக்களை மகிழ்ச்சியாக வைக்க பாடுபடுகிறார்கள். ஆனால் அவர்களோ மகிழ்ச்சியற்ற நிலையில் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.
மாரடைப்பு: காலை நேரம், மன அழுத்தம்
உலக அளவில் மாரடைப்பு காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் வரும். இரவில் சரியாக தூங்காதவர்கள், தாமதமாக சாப்பிடுபவர்கள், மன அழுத்தத்துடன் தூங்கச் செல்பவர்கள் ஆகியோருக்கு அட்ரீனல் ஹார்மோன் அதிகரிக்கும். இதுதான் மாரடைப்புக்கான காரணம். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிந்து அடைப்பு ஏற்பட 20 வருடங்கள் ஆகும். ஆனால் திடீர் மன அழுத்தம் (acute stress) ஏற்படும்போது, இரத்தக்குழாயில் ஒரு சிறிய கீறல் விழுந்து, அந்த இடத்தில் இரத்தம் உறைந்துவிடும். இதனால் 100% அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு கரோனரி த்ரோம்போசிஸ் என்று பெயர். இரத்தம் உறைவது ஒரு முக்கிய காரணம். ராஜேஷுக்கும் இதுதான் நடந்திருக்க வேண்டும்.
தடுப்பு முறைகள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை
இதனை எப்படித் தடுத்திருக்க முடியும் என்று கேட்டால், 20 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ஐந்து பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்: இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், சிஜி, எக்ஸ்ரே. இவற்றை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை செய்து கொண்டே இருக்க வேண்டும். நான் ஒவ்வொரு வருடமும் பரிசோதித்துக் கொள்வது எனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அறிய உதவுகிறது. இதய நோய்கள் அமைதியாக இருக்கும், கண்டுபிடிப்பது கடினம்.
"Please avoid Hurry, Worry, Curry" (அவசரம், கவலை, அதிக மசாலா உணவு) என்பதை நான் அடிக்கடி சொல்வேன். என்ன நடந்தாலும், பிரச்சனைகள் வரட்டும், வெளியில் உள்ள எதுவும் உங்கள் மகிழ்ச்சியைக் குறைக்க அனுமதிக்காதீர்கள்.
உள்மனதில் 100% மகிழ்ச்சியுடன் இருந்து, அந்த மகிழ்ச்சியற்ற நிலையை நீக்கக் கற்றுக்கொண்டால், நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ முடியும்.
நடிகர் ராஜேஷ் 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தார். அவர் பலருக்கு உடல்நலக் குறிப்புகள், ஜோதிட ஆலோசனைகள் எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். அவர் அனைத்தையும் என்னிடம் விவாதிப்பார். அவர் நம்முடன் இல்லாமல் போனது ஒரு பெரிய இழப்பு, என்று வருத்தத்துடன் முடித்தார் டாக்டர் சொக்கலிங்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.