/indian-express-tamil/media/media_files/2025/09/03/actress-aishwarya-baskaran-2025-09-03-14-44-10.jpg)
Actress Aishwarya Baskaran
கண்களில் கனல், வார்த்தைகளில் துணிச்சல், தாயின் பிம்பம், ஆனாலும் தனித்துவம்! இவர்தான் நடிகை ஐஸ்வர்யா. திரையுலகில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மியின் மகள் என்ற அடையாளத்துடன் அடியெடுத்து வைத்தவர், இன்று தனக்கென ஒரு தனி இடத்தை செதுக்கி வைத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா, நடிகை லக்ஷ்மி மற்றும் பாஸ்கர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் சாந்தா மீனா. அம்மா லக்ஷ்மியின் வழியில், திரையுலகம் இவருக்கு புதியதல்ல. ஆனால், அம்மாவின் புகழுக்கு ஏற்றவாறு தன்னை நிரூபிக்கும் பொறுப்பு இவருக்கு இருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இவர் நடித்திருந்தாலும், தமிழில் இவரது தனித்துவமான நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இன்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஐஸ்வர்யா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
"ஒரு கிரேப் ஐஸ் வாங்கினதுக்கு கடன் வச்சதுக்காக என் பாட்டி என்னை நாலு வயசுலே வச்சு சாத்திட்டாங்க. அந்த ஐஸ் அப்போ எட்டணா. நான் கேட்டேன், அண்ணா ஒருத்தர் கொடுத்தாரு, நானும் அதை வாங்கிக்கிட்டு சாப்பிட்டேன்.
மறுநாள் ஸ்கூலுக்கு போறப்ப, அந்த டிரைவர் என் பாட்டிக்கிட்ட போய், "நேத்து இந்த பொண்ணு ஒரு எட்டணா கடன் வச்சிருக்கு"னு சொல்லிட்டாரு. பாட்டி ஒரு மூச்சு இழுத்து உள்ள இருந்த எட்டணாவை எடுத்து கொடுத்துட்டாங்க. அப்புறம் என்ன? நான் டிரைவர் அண்ணாகிட்ட குசும்பு பண்ணிட்டு, அவர் கூடவே வண்டியில் ஏறி உக்காந்துட்டேன்.
வீட்டுக்கு வந்தப்போ, கூடை பின்னுற வயர் ஒன்னு இருக்கும்ல, அந்த வயரை எடுத்து, "கடன் வைப்பியா?"னு சொல்லி வீறி வீறி அடிச்சாங்க. "இன்னிக்கு அஞ்சு பைசா கடன் வைப்ப, நாளைக்கு அஞ்சு லட்சம் கடன் வைப்ப"னு திட்டுனாங்க. அப்போலாம் அஞ்சு பைசா பெரிய விஷயம் இல்ல.
எங்க பாட்டிக்கு எங்கிருந்து தான் இப்படி ஒரு புத்தி வருது? நான், "அண்ணா தான கொடுத்தாரு"னு சொன்னா, "அவரு உன் முகத்துக்காக கொடுக்கல, உன் குடும்பத்துக்காக கொடுத்திருக்காரு. இதை நீ நாளைக்கு தப்பா யூஸ் பண்ணுவ"னு சொல்லி திட்டுனாங்க”, என்று ஐஸ்வர்யா அந்த வீடியோவில் அந்த பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.
ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை எளிதானதாக இல்லை. 1994-ல் தன்வீர் அகமது என்பவரை திருமணம் செய்து, 1996-ல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு அனினா என்ற மகள் உள்ளார். விவாகரத்துக்குப் பிறகு, போதை பழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்தார். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் இவரை ஒரு சிறந்த கலைஞராகவும், மன வலிமை மிக்கவராகவும் மாற்றியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.